![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/2585907.jpg)
கோலாலம்பூர், மார்ச் 23 – தற்கொலை முயற்சியில் ஈடுபடுவோருக்கு தண்டனை தருவதை விட, அவர்களுக்கு எப்படி உதவுவது என்பதில் தான் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது.
தற்கொலை முயற்சிக்கு தண்டனை வழங்க வகைச் செய்யும் குற்றவியல் சட்டத்தின் 309-வது பிரிவு அகற்றப்பட்டிருப்பதால் அரசின் அப்புதிய முயற்சி மேலும் சுலபமாகியிருப்பதாக, சட்ட சீர்திருத்தங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ அசாலினா ஒத்மான் சாயிட் கூறினார்.
தற்கொலைக்கு முயன்ற போது காப்பாற்றப்பட்டு விட்டால், தாங்கள் கைதுச் செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு விடுவோமோ என அவர்கள் இனியும் பயப்படத் தேவையில்லை.
மாறாக, அவர்களுக்கு உரிய சிகிச்சைகளும் மனநல ஆலோசனைகளும் வழங்கப்படுவது உறுதிச் செய்யப்படும் என அமைச்சர் சொன்னார்.
தற்கொலைக்கு தண்டனை தீர்வல்ல; உரிய சிகிச்சையே சரியான தீர்வாக முடியும் என்ற கருத்தின் அடிப்படையில் மடானி அரசாங்கம் தற்கொலை முயற்சிக்கு சட்டத்தில் உள்ள தண்டனைகளை அகற்றியது.
இது, வரும் காலங்களில் தற்கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கையை நிச்சயம் குறைக்க உதவும் என அசாலினா நம்பிக்கைத் தெரிவித்தார்
மனநல ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மக்கள் மத்தியில் அதிகரிக்கப்படும் என்றார் அவர்.
தற்கொலை முயற்சியில் ஈடுபடுபவர்களுக்கு ஓராண்டு வரையிலான சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்க வகைச் செய்யும் குற்றவியல் சட்டத்தின் 309-வது பிரிவை அகற்றும் மசோதாவுக்கு, நாடாளுமன்றம் கடந்தாண்டு மே மாதம் ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.