
கோலாலம்பூர், செப்டம்பர்-20,நாட்டில் தவணை முறை வாகனக் கடன் வழங்கும் 20 முக்கிய வங்கிகளில், 14 வங்கிகள் ‘குறைந்துவரும் இருப்புத் தொகை’ எனப்படும் புதிய வட்டி கணக்கீட்டு முறையை அமுல்படுத்தியுள்ளன.
பினாங்கு, பத்து காவானில் நடைபெற்ற தேசியப் பயனீட்டாளர் விழாவில் பேசிய உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின (KPDN) அமைச்சர் டத்தோ அர்மிசான் அலி, எஞ்சிய 6 வங்கிகள் வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் இம்முறைக்கு மாறும் எனத் தெரிவித்தார்.
இவ்வாண்டு திருத்தப்பட்ட வாடகைக் கொள்முதல் சட்டத்தின் கீழ், பயனீட்டாளர்களுக்குச் சுமையாக இருந்த பழைய ‘Rule of 78’ மற்றும் flat rate எனப்படும் நிலையான வட்டி விகித நடைமுறைகள் முற்றிலுமாக இரத்துச் செய்யப்படுகின்றன.
புதிய விதிகளின்படி, செலுத்த வேண்டிய அசல் நிலுவைத் தொகைக்கு மட்டுமே வட்டி கணக்கிடப்படும்.
அதாவது, நீங்கள் அசல் தொகையைச் செலுத்தச் செலுத்த, மீதமுள்ள தொகைக்கு மட்டுமே வட்டி விதிக்கப்படும்.
இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது தவணைக் கடனை முன்கூட்டியே அடைக்கும்போது கணிசமான பணத்தைச் சேமிக்க முடியும்.
நாட்டில் உள்ள அனைத்து கடன் நிறுவனங்களும் 2027 ஏப்ரல் 1 முதல் இப்புதிய விதிமுறைகளை முழுமையாக நடைமுறைப்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.



