
கூச்சிங், செப்டம்பர்-20,மலேசியாவில் தொடர்ந்து சரிவடைந்து வரும் பிறப்பு விகிதத்தை அதிகரிக்கும் நோக்கில், பினாங்கு மற்றும் சரவாக் ஆகிய இரண்டு மாநிலங்களில் கூடுதல் கவனம் செலுத்த அரசாங்கம் முடிவுச் செய்துள்ளது.
சரவாக், கூச்சிங்கில் நடைபெற்ற மகளிர் தலைமைத்துவ நிகழ்வுக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய மகளிர், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் டத்தோ ஸ்ரீ நேன்ஸி ஷுக்ரி, அடுத்த ஆண்டில் கருவுறுதல் சார்ந்த திட்டங்களுக்கு அமைச்சு அதிக முக்கியத்துவம் அளிக்கும் என்றார்.
குறிப்பாக, குழந்தைப்பேறு இல்லாமல் தவிக்கும் தம்பதிகளுக்கு உதவும் வகையில் IVF போன்ற மருத்துவ உதவிகள் மற்றும் கருவுறுதல் ஊக்குவிப்பு திட்டங்கள் அடுத்த ஆண்டுக்கான பட்ஜெட் பரிந்துரைகளில் சேர்க்கப்பட்டுள்ளன.
நாட்டு மக்கள் தொகைப் பெருக்கம் சீராக இருக்க 2.1 விழுக்காடு பிறப்பு விகிதம் தேவைப்படும் நிலையில், தற்போது அது 1.6 விழுக்காடாகக் குறைந்துள்ளது.
எனவே, இளையத் தலைமுறையினரிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி பிறப்பு விகிதத்தை உயர்த்த இதுபோன்ற விரிவான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன என்றார் அவர்.



