
ஷா ஆலாம், செப்டம்பர்-20,தாம் நீதிமன்ற வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டதற்கும், பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியுடனான பேச்சுவார்த்தை அல்லது அரசியல் ஒத்துழைப்புக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என பெர்சாத்து கட்சித் தலைவர் தான் ஸ்ரீ முஹிடின் யாசின் தெளிவுப்படுத்தியுள்ளார்.
அத்தகைய யூகங்களை அவர் முற்றாக மறுத்தார்.
நீதிமன்றத்தின் இந்த விடுதலை உத்தரவை, ஒற்றுமை அரசாங்கம் அல்லது பக்காத்தான் ஹராப்பானுடனான பேச்சுவார்த்தையோடு இணைத்துப் பேசுவது அடிப்படையற்றது என அவர் சுட்டிக்காட்டினார்.
நீதிமன்றத்தின் முடிவை அரசியல் பேச்சுவார்த்தைகளுடன் எவ்வாறு தொடர்புபடுத்துகிறார்கள் என்பது தமக்கு விளங்கவில்லை என்றும் அந்த முன்னாள் பிரதமர் தெரிவித்தார்.
200 மில்லியன் ரிங்கிட் ஊழல் மற்றும் சட்டவிரோத பணப் பரிமாற்றம் சார்ந்த 4 குற்றச்சாட்டுகளில் இருந்து முஹிடினை அண்மையில் கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் முழுமையாக விடுவித்து உத்தரவிட்டது.
அரசுத் தரப்பு வழக்கை தொடர விரும்பவில்லை எனத் தெரிவித்ததைத் தொடர்ந்து நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியிருந்தது.
எனினும் மேலும் 3 வழக்குகள் அப்படியே உள்ளன.
இந்நிலையில், பெர்சாத்துவின் 10-ஆம் ஆண்டு நிறைவு விழாவில் பேசிய முஹிடின், இந்த விடுதலையின் பின்னணியில் PH-உடனான அரசியல் பேரம் எதுவும் இல்லை என விளக்கம் அளித்துள்ளார்.
பெரிக்காத்தான் நேஷனலில் ஏறக்குறைய ஓரங்கட்டப்பட்டு விட்ட பெர்சாத்து, தனது அரசியல் உயிர் வாழ்வுக்காக பக்காத்தான் உள்ளிட்ட கட்சிகளுடன் ஒத்துழைப்பதுப் பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.



