![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/daging-700x470.jpeg)
கோலாலம்பூர், ஜூன் 4 – உணவு விநியோகிப்பாளர் தவறான உணவை அனுப்பியதால், வாடிக்கையாளர் ஒருவரின் பிள்ளைகள் பன்றி இறைச்சியை சாப்பிட்ட சம்பவம், நேற்று முதல் சமூக ஊடகங்களில் வைரலாகியுள்ளது.
இசாம் நாயான் என்பவர் தனது முகநூலில் பதிவிட்டுள்ள அச்சம்பவம் தொடர்பான பதிவு, இதுவரை ஆயிரத்துக்கும் அதிகமான முறை பகிரப்பட்டுள்ளது.
அந்த பதிவுடன், உணவின் புகைப்படத்தையும், அதற்கான ரசீதையும் இசாம் உடன் இணைத்துள்ளார்.
“எனது நண்பரின் வீட்டிற்கு தவறுதலாக வறுக்கப்பட்ட பன்றி இறைச்சி அனுப்பப்பட்டது. அவரது பிள்ளைகள் அதனை சாப்பிட்டு விட்டனர். உண்மையில் “மீ தாரிக்” உணவுக்கு தான் அவர் ஆர்டர் செய்திருந்தார்” என இசாம் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இசாம் நண்பரின் மனைவி ஆன்லைன் வகுப்பை நடத்திக் கொண்டிருந்த போது, பசிப்பதாக கூறிய பிள்ளைகளுக்கு அவர் ஆன்லைன் மூலம் உணவை ஆர்டர் செய்துள்ளார்.
உணவு விநியோகிக்கப்பட்டவுடன், பிள்ளைகள் அதனை வாங்கி உண்டுள்ளனர்.
அந்த உணவின் வெளிப்புறத்தில் வேறு ரசீதும், உட்புறத்தில் உணவு பொட்டலங்களுக்கு அடியில் வேறு ரசீதும் இருந்தது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து, பிள்ளைகள் உண்டது உண்மையில் பன்றி இறைச்சி என்பது தெரிய வந்ததாக இசாம் பதிவிட்டுள்ளார்.
“எல்லா உணவையும் பிள்ளைகள் உண்டு முடித்த பின்னர் தான், அது தவறான என்பதை கண்டுபிடித்தீர்களா?” என இணைய பயனர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ள வேளை ;
“இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க, அரசாங்கம் அல்லது சமய துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்” என மற்றொருவர் குறிப்பிட்டுள்ளார்.