தானா மேரா, ஜூன் 3 – தானா மேரா, கம்புங் ஏர் அசஹான் ஹுலுவில் குடியிருப்பு வாசிகளுக்கு மிரட்டலாக இருந்த ஆண் சூரிய கரடி வனவிலங்கு பூங்காத்துறை வைத்த பொறியில் சிக்கியது.
கடந்த ஒரு வாரத்தில் பொறியில் சிக்கிய இரண்டாவது சூரிய கரடி இதுவாகும். பொதுமக்களிடமிருந்து புகார் கிடைக்கப்பெற்றதை தொடர்ந்து அந்த கரடியை பிடிப்பதற்காக வைக்கப்பட்ட பொறியில் அது சிக்கியதாக கிளந்தான் வனவிலங்கு பூங்காத்துறையின் இயக்குனர் முகமட் ஹஃபிட் ரொஹானி (Mohamad Hafid Rohani) தெரிவித்தார்.
ஏற்கனவே கடந்த புதன்கிழமையன்று பெண் சூரிய கரடி ஒன்று வனவிலங்கு பூங்காத்துறை வைத்த பொறியில் சிக்கியது.
கம்புங் ஏர் அசஹான் ஹுலு கிராமத்தில் பயிர்களை அந்த கரடிகள் நாசப்படுத்தி வந்தன.
தற்போது அந்த வட்டாரத்தில் நடமாடி வந்த இரண்டு கரடிகள் பிடிபட்டதால் குடியிருப்பு வாசிகள் நிம்மதி அடைவார்கள் என முகமட் ஹஃபிட் நம்பிக்கை தெரிவித்தார்.
புதிதாக பிடிக்கப்பட்ட கரடி வனப் பகுதியில் விடப்படும் என்றும் அவர் கூறினார்.