![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/02/MixCollage-13-Feb-2024-10-31-AM-792.jpg)
கோத்தா பாரு, பிப் 13 – டத்தோ விருதை கொண்டவர்கள் உட்பட அதிகமான முக்கிய பிரமுகர்கள் திருமணம் செய்து கொள்வதற்காக தாய்லாந்தின் சோங்க்லாவுக்கு செல்கின்றனர். இதற்கு முன் பல மலேசியர்கள் நாராதிவாட் மாநிலத்திற்கு சென்று திருமணம் செய்து கொண்டனர். கடந்த ஆண்டிலிருந்து சோங்க்லாவுக்கு சென்று திருமணம் செய்து கொள்ளும் மலேசியர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக நாராதிவாட் இஸ்லாமிய சமய மன்றத்தின் துணைத் தலைவர் அப்துல் அஜீஸ் சே மாமட் தெரிவித்திருக்கிறார். தனிப்பட்ட ரகசியத்தை பாதுகாக்கும் முக்கிய காரணத்திற்காகவே பலர் தங்களது திருமணத்திற்காக இப்போது சோங்க்லாவுக்கு செல்வதாக அவர் விளக்கம் அளித்தார்.
இதற்கு முன் மலேசியாவைச் சேர்ந்த முக்கியமான பிரமுகர்கள் மற்றும் சாதாரண பிரஜைகள் நாராதிவாட் இஸ்லாமிய சமய மன்றத்தில் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் கடந்த ஒரு ஆண்டுகளாக நாராதிவாட் இஸ்லாமிய மன்றத்தில் திருமணம் செய்து கொள்ளும் 95 விழுக்காடு மலேசிய தம்பதிகள் சாதாரண பிரஜைகள் என அப்துல் அஜீஸ் விவரித்தார். தற்போது “VIP” எனப்படும் முக்கிய பிரமுகர்கள், பிரபலமானவர்கள், டத்தோ விருதைக் கொண்ட பிரமுகர்கள் சோங்க்லாவிலுள்ள சமய மன்றத்தில் திருமணம் செய்து கொள்கின்றனர்.