
புது டெல்லி, ஜூன்-24-இந்திய அதிபர் மாளிகையில் நடைபெற்ற ‘பத்ம’ விருதுகள் வழங்கும் விழாவில், பிரபல நடிகர் ஆர்.மாதவன் ‘பத்ம ஸ்ரீ’ விருதுப் பெற்றார்.
26 ஆண்டுகளுக்கு முன்பு இளம் காதல் கதாநாயகனாகி அறிமுகமாகி இன்று இந்தியாவே வியக்கும் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவராக உயர்ந்துள்ள மாதவனின் கலைச்சேவைக்காக, இந்திய அரசாங்கத்தின் நான்காவது பொது உயரிய விருதான இந்த ‘பத்ம ஸ்ரீ’ வழங்கப்பட்டுள்ளது.
மலேசிய அரசாங்கத்தால் வழங்கப்படும் ‘துன்’, ‘தான் ஸ்ரீ’, ‘டத்தோ ஸ்ரீ’, ‘டத்தோ’ போன்று, இந்தியாவில் ‘பாரத ரத்னா’, ‘பத்ம விபூஷன்’, ‘பத்ம பூஷன்’, ‘பத்ம ஸ்ரீ’ விருதுகள் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
இந்த நெகிழ்ச்சியான தருணத்தில், மாதவன் பிரதமர் நரேந்திர மோடியை அன்போடு வரவேற்று, இந்திய அதிபர் திரௌபதி முர்முவை வணங்கி விருதினைப் பெற்றார்.
அப்போது அரங்கில் இருந்த அவரது மனைவி சரிதா மற்றும் மகன் வேதாந்த் ஆகியோர் எழுந்து நின்று தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
இந்த அங்கீகாரம் வெறும் விருது மட்டுமல்ல, ஒரு மாபெரும் பொறுப்பு என மாதவன் பின்னர் தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இவ்வேளையில் மலையாள சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படும் மூத்த நடிகர் மம்முட்டிக்கு, மூன்றாவது உயரிய விருதான ‘பத்ம பூஷன்’ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
50 ஆண்டுகளுக்கும் மேலாக, 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து சாதனை படைத்ததற்காகவும், அவரது சமூக நலன் மற்றும் தொண்டு நிறுவனப் பணிகளைப் பாராட்டியும் இந்த உயரிய விருது அவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
பல தேசிய விருதுப் பெற்ற நடிகர்களான மாதவன், மம்முட்டி இருவருக்கும் திரையுலகினரும் இரசிகர்களும் வாழ்த்துத் தெரிவித்து வருகின்றனர்.



