![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/11/MixCollage-10-Nov-2023-09-52-AM-4927.jpg)
கோலாலம்பூர், நவ 10 – தீபாவளியைக் கொண்டாடும் சரவாக்கை சேர்ந்த அனைத்து இந்து அரசு ஊழியர்களும் திங்கள்கிழமை நவம்பர் 13 ஆம் தேதியன்று பதிவு செய்யப்படாத விடுமுறை வழங்க சரவாக் மாநில அரசாங்கம் இணக்கம் தெரிவித்திருக்கிறது. சரவாக் மாநில தலைமைச் செயலாளர் டத்தோ அமர் முகமட் அபுபக்கர் மர்சுகி வெளியிட்ட சுற்றறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார். தீபாவளி பெருநாள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டால் மறுநாள் பதிவு செய்யப்படாத விடுமுறை வழங்கும் வகையில் 1978 ஆம் ஆண்டு சுற்றறிக்கையின் முடிவை மேம்படுத்தும் வகையில் இது அமைவதாக அவர் தெரிவித்தார்.
தீபாவளி பெருநாள் வேலை நாளில் வந்தால், அரசு ஊழியர்கள் அன்று பதிவு செய்யப்படாத விடுப்புக்கு விண்ணப்பிக்கலாம். அதே வேளையில் தீபாவளி ஞாயிற்றுக்கிழமை வந்தால், அடுத்த வேலை நாளில் பதிவு செய்யப்படாத விடுப்புக்கு அரசு ஊழியர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த ஆண்டு தீபாவளி நவம்பர் 12 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருவதால், இந்துக்கள் விடுப்புக்காக தங்களது துறையின் தலைவர்களிடம் விண்ணப்பிக்கலாம் என்று அமர் முகமட் அபுபக்கர் குறிப்பிட்டார்.