கோலாலம்பூர், ஜூன் 10 – மிகவும் மோசமாக துன்புறுத்தப்பட்டு அடுக்கு மாடி வீட்டில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 21 வயதுடைய இந்தோனேசிய பணிப்பெண் போலீஸ் உதவியோடு மீட்கப்பட்டார்.
பெட்டாலிங் ஜெயா, முத்தியாரா டமன்சாராவிலுள்ள அடுக்குமாடி வீட்டின் முற்றத்திலிருந்து அப்பெண் வீசிய கடிதம் போலீஸ் கையில் சிக்கியதைத் தொடர்ந்து அவர் மீட்கப்பட்டார்.
தலையனை மற்றும் மெத்தை மட்டுமே வழங்கப்பட்டு வீட்டின் முற்றத்தில் அடைத்துவைக்கப்பட்ட அப்பெண் மழைவந்த போதிலும் நனைந்து கொண்டே தூங்கியது உட்பட பல்வேறு துன்புறுத்தலுக்கும் உள்ளானதாக கூறப்படுகிறது.
புக்கிட் அமான் மனித கடத்தல் பிரிவின் உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கொண்ட போலீஸ் குழுவினர் நேற்று மாலை 5 மணியளவில் மேற்கொண்ட சிறப்பு நடவடிக்கையின் மூலம் அப்பெண்ணை மீட்டனர்.
உள்நாட்டைச் சேர்ந்த குடும்பத்தினர் அந்த அப்பணிப் பெண்ணை வீட்டின் முற்றத்தில் தங்க வைத்திருந்தது விசாரணை மூலம் கண்டறியப்பட்டதாக புக்கிட் அமான் கடத்தல் துடைத்தொழிப்பு பிரிவின் குற்றவியல் விசாரணை துணை இயக்குநர் சோபியான் சன்தோங் ( Soffian Santong ) கூறினார்.
அந்த பெண் அந்த வீட்டின் முற்றத்திலிருந்து வெளியேறுவதற்கு அனுமதிக்கப்படவில்லை. விடியற்காலை 5 மணியிலிருந்து 11 மணிவரை வீட்டு வேலைக்காக உள்ளே அனுமதிக்கப்படும் அப்பெண் அதன் பின் மற்ற நேரங்களில் எல்லாம் அந்த வீட்டின் முற்றத்திலேயே அடைத்து வைக்கப்பட்டிருந்தார் என Sofian Santong கூறினார்.
வேலைக்கு வந்து இப்போதுதான் ஒரு வாரம் ஆகியிருப்பதால் அப்பெண்ணுக்கு இன்னும் சம்பளம் வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.