![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/11/3b655dc3-2072-4004-b931-6e0e39033ec4-780x470.jpg)
கோலாலம்பூர், நவ 24 – பினாங்கில் நடைபெற்ற தேசிய அளவிலான செந்தமிழ் விழாவில் கடவுள் வாழ்த்து மற்றும் தமிழ் வாழ்த்துக்கு தடை விதிக்கப்பட்டது ஏற்பாட்டாளர்களின் அறியாமையே தவிர கல்வி அமைச்சின் நிலைப்பாடோ அல்லது கொள்கையோ அல்ல என கல்வி அமைச்சர் Fadhlina Sidek கின் சிறப்பு அதிகாரி தியாகராஜன் சங்கரநாராயணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருக்கிறார். இந்த சம்பவம் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் மலேசியா மடானி கொள்கைக்கு எதிராக உள்ளது. பிரதமர் எப்போதும் திருவள்ளுவரின் திருக்குறளை பல நிகழ்சிகளில் உவமையாக கூறும் வழக்கத்தை கொண்டிருப்பதையும் தியாகராஜன் சுட்டிக்காட்டினார். குறிப்பாக அரசு மற்றும் அரசாங்க நிர்வாகத்திற்கு திருக்குறள் காட்டும் பண்பு நெறிகளை பிரதமர் அடிக்கடி கூறிவந்துள்ளார்.
நவம்பர் 23 ஆம் தேதி, வியாழக்கிழமை நடைபெற்ற செந்தமிழ் விழாவில் கடவுள் வாழ்த்து மற்றும் தமிழ் வாழ்த்துக்கு விதிக்கப்பட்ட தடையை கல்வி அமைச்சர் Fadhlina Sidek கடுமையாக கருதுகிறார். இது தொடர்பான அறிக்கையை ஆராய்ந்த பின்னர் கல்வி அமைச்சர் பொருத்தமான நடவடிக்கை எடுப்பார். அமைச்சரின் சிறப்பு அதிகாரி என்ற முறையில் இந்த விவகாரத்தில் பொறுமை காட்டும்படி சம்பந்தப்பட்டவர்களை கேட்டுக்கொள்வதாகவும் முழுமையான விசாரணை நடத்துவதற்கான வாய்ப்பை வழங்கும்படி வணக்கம் மலேசியாவிற்கு அனுப்பிய அறிக்கையில் தியாகராஜன் கேட்டுக்கொண்டார்.