![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/MixCollage-12-Mar-2024-07-10-PM-7426.jpg)
கோலாலம்பூர், மார்ச்-12, தேசிய சேவைப் பயிற்சி PLKN -னில் பள்ளி மாணவர்களும் சேர்க்கப்படுவார்களா என்பது குறித்து அரசாங்கம் இன்னும் முடிவேதும் எடுக்கவில்லை.
தற்காப்பு அமைச்சர் டத்தோ ஸ்ரீ மொஹமட் காலிட் நோர்டின் அவ்வாறு கூறியுள்ளார்.
“இதுவரையிலான கலந்தாய்வுகளில் மாணவர்களின் பங்கேற்புக் குறித்து பேசப்படவில்லை. மாறாக, பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் மற்றும் மேற்கல்வி வாய்ப்புக்குக் காத்திருப்பவர்களுக்கு மட்டும் தான் அப்பயிற்சி என முடிவாகியுள்ளது” என்றார் அவர்.
PLKN பயிற்சிக்கான வயது வரம்பை நிர்ணயிப்பதில், பெற்றோருக்கு இருக்கும் கவலையையும் ஒரு வித அச்சத்தையும் அரசாங்கம் நிச்சயம் கவனத்தில் எடுத்துக் கொள்ளும் என அமைச்சர் சொன்னார்.
ஆக, இது போன்ற அம்சங்களை வைத்துப் பார்க்கையில் PLKN பயிற்சியில் பள்ளி மாணவர்கள் சேர்க்கப்படும் சாத்தியம் குறைவு தான் என அமைச்சர் கோடி காட்டினார்.
இவ்வேளையில் தேசிய சேவைப் பயிற்சி இவ்வாண்டு தொடங்குமா இல்லையா என்பதும் இன்னும் இறுதிச் செய்யப்படவில்லை.
பயிற்சித் திட்டங்கள் உயர் கல்வி அமைச்சுடன் தொடர்ந்து விவாதிக்கப்பட்டு வருவதே அதற்கு காரணம் என அமைச்சர் கூறினார்.
2018-ஆம் ஆண்டு நிறுத்தப்பட்ட PLKN பயிற்சி, புத்துயிர் அளிக்கப்பட்டு, பல்வேறு புதிய அம்சங்களுடன் மீண்டும் அறிமுகம் காணும் என முன்னதாக அரசாங்கம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.