கோலாலம்பூர், ஏப் 2 – கே. கே மார்ட் விற்பனை நிலையங்களில் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட மூன்று பெட்ரோல் வெடிகுண்டு தாக்குதலை தொடர்ந்து தேசிய பாதுகாப்பு மன்றத்தின் அவசர கூட்டத்தை உடனடியாக நடத்தும்படி பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் Lim Guan Eng கோரிக்கை விடுத்துள்ளார். நமது பல்லின மக்கள் மற்றும் பல இன சமூகத்தின் ஐக்கியமும் அமைதியும் சீர்குலையும் எந்தவொரு மோதலையும் தடுப்பதற்கான உடனடி நடவடிக்கையை எடுப்பதற்கான செயல் முறை திட்டத்திற்கு அவசர தேசிய பாதுகாப்பு மன்ற கூட்டத்தை பிரதமர் கூட்ட வேண்டும் என DAP யின் தலைவருமான Lim Guan Eng வெளியிட்ட அறிக்கையில் வலியுறுத்தியுள்ளார்.
அதிகரித்து வரும் பதட்டங்களை முடிவுக்கு கொண்டுவருவதற்கு கூட்டரசு அரசாங்கத்தின் தலையீடு தேவை என்பதோடு , அம்னோ இளைஞர் பிரிவின் தலைவர் டாக்டர் Akmal Saleh இந்தப் பிரச்சினையைத் தொடர்ந்து தூண்டுவது பொறுப்பற்றது மற்றும் ஒற்றுமை அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருக்கும் மலாக்க அரசாங்கத்தின் தலைவர்களில் ஒருவரான Akmal Saleh வுக்கும் இது பொருத்தமானதாக இல்லையென Lim Guan Eng சுட்டிக்காட்டினார். தமக்கு அரசியல் நோக்கம் இல்லையென்று கூறியிருக்கும் அம்னோ இளைஞர் தலைவர், கே.கே. மார்ட் மீதான தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்த போதிலும், அந்த விற்பனை மையங்களை புறக்கணிக்கும்படி விடுத்த கோரிக்கையை அவர் நிறுத்தவில்லை. அந்த புறக்கணிப்பு கோரிக்கை அறியப்படாத ஆபத்தான தீவிரவாதக் கூறுகளால் நடத்தப்படும் வன்முறைத் தாக்குதல்களை நிறுத்தவில்லையென Lim Guan Eng தெரிவித்தார்.