Latestமலேசியா

தேசிய பாரம்பரிய உணவுளாக பக்குத்தே, ஊத்தப்பம்அறிவிப்பு

கோலாலம்பூர், பிப்ரவரி 24 – பக்குத்தே எனப்படும் சீனர்களின் பன்றி இறைச்சி சூப்பும், இந்தியர்களின் ஊத்தப்பமும் தேசிய பாரம்பரிய உணவுகளாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

அவையிரண்டுக்கும் அந்த அந்தஸ்து கிடைத்திருப்பதை அரசு பதிவேட்டில் இடம் பெற்றிருக்கும் பட்டியல் உறுதிச் செய்கிறது.

புராசாக், கோலோக் மீ, நாசி அம்பங், வேக வைக்கப்பட்ட டோடோல், குவே லாப்பிஸ், குவே காராஸ், கத்தீரா பானம் உள்ளிட்டவையும் அப்பட்டியலில் இடம் பிடித்துள்ளன.

சீனர்களிடையே மிகவும் பிரபலமான பக்குதே போர்ட் கிள்ளானைத் ‘தாயகமாக’ கொண்டதாக கூறப்படுகிறது.
குறிப்பாக 19-வது நூற்றாண்டில் ஹொக்கியன் சமுதாய கூலித் தொழிலாளர்களின் சத்துணவாக அது விளங்கி வந்திருக்கிறது.

எனினும், இந்த பக்குதேவுக்கு சிங்கப்பூரும் சொந்தம் கொண்டாடியதால் சர்ச்சை நிலவியது ; சிங்கப்பூர் எற்கனவே ஹைனான் கோழி சாதத்திற்கும் சொந்தம் கொண்டாடுவது குறிப்பிடத்தக்கது.

பக்குத்தேவை தேசிய பாரம்பரிய உணவாக அறிவிக்கும் பரிந்துரை கடந்தாண்டு நாடாளுமன்றத்தில் சர்ச்சையாகி, பெரும் விவாதமே நடைபெற்றது நினைவிருக்கலாம்.

இந்நிலையில் தற்போது ஒருவழியாக பக்குத்தே தேசிய பாரம்பரிய உணவாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இந்த தேசிய பாரம்பரிய உணவுகள் பட்டியலில் இந்தியர்களின் ஊத்தப்பமும் தற்போது இணைக்கப்படிருப்பது சிறப்பம்சம்.

நாசி லெமாக், லக்சா, கார நண்டு, பினாங்கு சார் குவைத்தியாவ் போன்ற புகழ்ப் பெற்ற உணவுகள் ஏற்கனவே இடம் பிடித்து விட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!