![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/11/MixCollage-17-Nov-2023-11-38-AM-8307.jpg)
நாக்பூர், நவம்பர் 16 – இந்தியாவில், தேநீர் கேட்டும் வழங்கப்படாததால், சினமடைந்த மருத்துவர் ஒருவர், அறுவை சிகிச்சை அறையிலிருந்து பாதியிலேயே வெளியேறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்பந்தப்பட்ட மருத்துவர், மத்திய இந்தியாவிலுள்ள, நாக்பூர் நகரில், எட்டு பெண்களுக்கு குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த போது அச்சம்பவம் நிகழ்ந்தது.
நான்கு பெண்களுக்கு அறுவை சிகிச்சை செய்த பின்னர், இதர நால்வருக்கு மயக்க மருந்தை வழங்கிய அவர், மருத்துவமனை ஊழியரிடம் தனக்கு ஒரு கோப்பை தேநீர் கலந்து தருமாறு கேட்டுள்ளார்.
ஆனால், தாம் கோரியபடி சூடான பானத்தை அவர்கள் வழங்கத் தவறியதால், கோபத்தில் மீதமுள்ள அறுவை சிகிச்சை நடைமுறைகளை மேற்கொள்ளாமல் அவர் அறுவை சிகிச்சை அறையை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது.
எனினும், எஞ்சிய பெண்களுக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உடனடியாக மற்றொரு மருத்துவர் அனுப்பப்பட்டார்.
இவ்வேளையில், பாதியிலேயே அறுவை சிகிச்சை அறையிலிருந்து வெளியேறிய அந்த ஆண் மருத்துவருக்கு எதிராக, இந்திய குற்றவியல் சட்டத்தின் கீழ், கிரிமினல் குற்றச்சாட்டை சுமத்த முடியுமென, நாக்பூர் மாவட்ட தலைவர் செளமியா சர்மா கூறியுள்ளார்.
அதனால், அவ்விவகாரம் தொடர்பில் முழு விசாரணை மேற்கொள்ள சிறப்பு குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.