![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/05/ffcf01f0-8866-4514-87cc-1e00594ec904.jpg)
தோக்கியோ, மே 24 – ஜப்பான், ஹனேடா விமான நிலையத்தில், ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இரு விமானங்கள், இறக்கைப் பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகின.
உள்நாட்டு நேரப்படி இன்று காலை மணி 7.30 வாக்கில் அச்சம்பவம் நிகழ்ந்தது.
அச்சம்பவத்தில் இரு விமானங்களும் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. எனினும், உயிருடற் சேதம் எதுவும் பதிவுச் செய்யப்படவில்லை.
ஹொக்கைடோவிலுள்ள, நியூ சிட்டோஸ் விமான நிலையத்திற்கு புறப்படவிருந்த JAL 503 விமானம், பின்நோக்கி நகர்ந்த போது, பக்கத்து விமான நிறுத்துமிடத்தை நோக்கி வந்து கொண்டிருந்த விமானத்தின் மீது மோதியதாக கூறப்படுகிறது.
அதனால், 328 பயணிகளை ஏற்றி இருந்த JAL 503 விமான சேவை இரத்துச் செய்யப்பட்ட வேளை ; ஆள் இன்றி இருந்த மற்றொரு விமானத்தை மாற்ற ஏதுவாக அதன் சேவை ஒத்தி வைக்கப்பட்டது.
அண்மைய சில காலமாக, விமான நிலையத்தில், விமானங்கள் மோதிக் கொள்ளும் விபத்துகள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.
ஆகக் கடைசியாக, இவ்வாண்டு ஜனவரி இரண்டாம் தேதி, ஹனேடா விமான நிலையத்தில், JAL பயணிகள் விமானம் ஒன்று, ஜப்பானிய கடலோர காவல்படை விமானத்துடன் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில், கடலோர காவல்படை விமானத்தில் இருந்த அறுவரில் ஐவர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.