![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/shein.jpg)
ஜோர்ஜ் டவுன், ஜூன் 11 – ஷீன் (Shein) “ஆன்லைன்” விற்பனை தளம் வாயிலாக விற்கப்பட்டு, நாட்டிற்குள் தருவிக்கப்படும் குழந்தைகளுக்கான பொருட்கள் தொடர்பில், விசாரணை நடத்துமாறு, CAP எனும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
ஷீன் ஆன்லைன் விற்பனை தளத்தில் விற்கப்படும் குழந்தைகளுக்கான பொருட்களில், அதிக நச்சு இரசாயனங்கள் இருப்பதை அண்மையில்,தென் கொரியா, சியோல் அதிகாரிகள் வெளிப்படுத்தியிருந்தனர்.
அதன் எதிரொலியாக, CAP தலைவர் மொஹிடின் அப்துல் காடிர் (Mohideen Abdul Kader), அப்பொருட்களை விசாரணைக்கு உட்படுத்துமாறு வலியுறுத்தியுள்ளார்.
ஷீனில் விற்பனை செய்யப்படும் குழந்தைகள் காலணிகள், தோல் பைகள், இடைவார் பட்டைகள் உள்ளிட்ட எட்டு வகையான பொருட்களில், பிளாஸ்டிக்கை இலகச் செய்யும் “பித்தலேட்டுகள்” (Phthalates) எனப்படும் ஒரு வகை இரசாயனம் அதிகளவில் இருப்பது, விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அந்த இரசாயனம், மனிதனின் வளர்ச்சி உட்பட இனப்பெருக்க அமைப்பு மற்றும் நரம்பியலில் கோளாறுகளை ஏற்படுத்தும்.
மலேசியாவில், குறிப்பாக இளைஞர்களிடையே மிகவும் புகழ்பெற்ற ஆன்லைன் விற்பனை தளமாக ஷீன் திகழ்கிறது.
அதனால், அந்த விற்பனை தளத்தில் விற்கப்படும் பொருட்கள் தொடர்பில், அதிகாரிகள் உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டுமென மொஹிடின் வலியுறுத்தியுள்ளார்.
அதே சமயம், புதிதாக வாங்கும் ஆடைகளில் இருக்கும் இரசாயனங்களால் பாதிக்கப்படாமல் இருக்க, அவற்றை நன்கு துவைத்து அணியுமாறு பொதுமக்களுக்கும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.