கோலாலம்பூர், நவ 23 – தாய்மொழிப் பள்ளிகள் செயல்படுவதும் அதில் தமிழ் மற்றும் சீன மொழிகளை பயன்படுத்துவதும் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு ஏற்புடையது என மேல்முறையீட்டு நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு இந்நாட்டில் அம்மொழிகள் காக்கப்படுவதற்கும் நிலைத்திருப்பதற்கும் வழி வகுத்துள்ளது.
இதன் வழி நாட்டின் அரசியல் அமைப்புச் சட்டத்தை வரைந்தவர்கள் தமிழ் மற்றும் சீன மொழி பயன்பாட்டை அரசியல் அமைப்புக்கு எதிராக வரைந்திருப்பார்கள் என வாதிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என ம.இ.கா-வின் தலைமைச் செயலாளர் டத்தோ ஆர்.டி.ராஜசேகரன் கூறியுள்ளார்.
தாய்மொழிப் பள்ளிகள் செயல்படுவதும் அவற்றில் தமிழ் மற்றும் சீன மொழியைப் பயன்படுத்துவதும் அரசியல் அமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என டிசம்பர் 2019ல் இஸ்லாமிய கல்வி மேம்பாட்டு மன்றம் மற்றும் மலேசிய எழுத்தாளர் சங்கத்தின் சம்மேளனம் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தன.
டிசம்பர் 2021ல் அவ்வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. அந்த தீர்ப்புக்கு எதிராக கொண்டுவரப்பட்ட மேல் முறையீட்டில் இன்று தீர்ப்பு தாய்மொழிப் பள்ளிகளுக்கு சாதகமாக வந்தது.
உயர்நீதிமன்றத்தில் இவ்வழக்கில் தலையீட்டுத் தரப்பாக ம.இ.கா-வும் ம.சீ.சா-வும் செயல்பட அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.