![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/MixCollage-04-Jun-2024-03-59-PM-4545.jpg)
கோலாலம்பூர், ஜூன் 4 – ஓய்வு வயதை அடைந்த 5 ஆண்டுகளுக்குள் நால்வரில் ஒருவர் தங்களது இ.பி.எப் (EPF) சேமிப்பு தொகையை முடித்து விடுகின்றனர் என இ.பி.எப் தரவுகள் தெரிவிப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் (Anwar Ibrahim )கூறியிருக்கிறார். இ.பி.எப் பலன்களின் மொத்தத் தொகையால் பல மலேசியர்கள் ஓய்வு காலத்தில் நியாயமான வாழ்க்கைத் தரத்தை பராமரிக்கவோ அல்லது நீண்ட ஆயுட்கால அபாயங்களை நிர்வகிக்கவோ முடியாமல் போகிறார்கள் என இன்று அனைத்துலக சமூக நல்வாழ்வு மாநாட்டின் தொடக்க விழாவில் பேசியபோது நிதியமைச்சருமான அன்வார் கூறினார். கூடுதலாக, சராசரி மலேசிய மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது முதியோர்கள் வறுமைக்கு ஆளாகிறார்கள். 29 விழுக்காடு மலேசியர்களுக்கு மட்டுமே ஓய்வூதியம் போன்ற வருமானம் உள்ளது.
60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களில் 26 விழுக்காட்டினருக்கும் அதிகமானோர் தங்கள் உடல்நலம் குறையும் வரை தொடர்ந்து பணியாற்றுவார்கள் என்றும் ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளதை அவர் சுட்டிக்காட்டினார். மலேசியாவில் உள்ள ஒவ்வொரு தலைமுறையும் கண்ணியத்துடன் முதுமையை எதிர்நோக்குவதை உறுதி செய்வதற்காக, மலேசிய ஓய்வூதியக் கட்டமைப்பில் சீர்திருத்தத்தை நாம் தீவிரமாக மேற்கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. அனைத்து மலேசியர்களுக்கும் அவர்களின் பிற்காலத்தில் நிதிப் பாதுகாப்பு மற்றும் சமத்துவத்தை உறுதிப்படுத்தவும் மற்றும் நேர்மறையான நீண்டகால பொருளாதார வளர்ச்சிக்கு பங்களிக்கவும் இந்த சீர்த்திருத்தம் உதவும் என அன்வார் கூறினார்.