
புத்ராஜெயா, ஏப்ரல்-14-அரசாங்கம் ஏற்கனவே அறிவித்தபடி அரசு ஊழியர்கள் நாளை முதல் வீட்டிலிருந்து வேலை செய்யவிருக்கும் நிலையில், அதில் சுமார் 200,000 பேர் சம்பந்தப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
அரசாங்கத் தலைமைச் செயலாளர் தான் ஸ்ரீ ஷம்சுல் அஸ்ரி அபு பாக்கார் அதனைத் தெரிவித்தார்.
“என்றாலும், எல்லா அரசு ஊழியர்களும் இதற்குத் தகுதிப் பெற்று விட மாட்டார்கள்” என்றார் அவர்.
தற்போதைய தொழில்நுட்பக் கட்டமைப்பு 200,000 பயனர்களைத் தாங்கும் திறன் கொண்டிருந்தாலும், அனைத்து ஊழியர்களுக்கும் இந்தச் சலுகை வழங்கப்படாது.
மாறாக, பல்வேறு காரணங்களை அடிப்படையாகக் கொண்டே ஊழியர்கள் தேர்வு செய்யப்படுவர்.
இறுதி முடிவு அந்தந்தத் துறைத் தலைவர்களின் பரிந்துரை மற்றும் ஒப்புதலின் பேரிலேயே அமையும் என, ஷம்சுல் தெளிவுப்படுத்தினார்.
வீட்டிலிருந்து வேலை செய்தாலும், உற்பத்தித் திறன் பாதிக்கப்படாதிருப்பதை அரசு ஊழியர்கள் உறுதிச் செய்ய வேண்டும்; குறிப்பாக சமூக வலைத்தளங்களில் நேரத்தைச் செலவிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றார் அவர்.
அத்தியாவசியமற்ற துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு இந்த WFH சலுகை வழங்கப்படுகிறது.
இதன் மூலம் எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதுடன், ஊழியர்களின் வாழ்க்கைச் செலவினங்களைக் கட்டுப்படுத்தவும் அரசாங்கம் இலக்கு கொண்டுள்ளது.



