
சிரம்பான், ஆகஸ்ட்-3-நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலில் பாரிசான் நேஷனல் வெற்றிப் பெற்று மீண்டும் ஆட்சியமைக்க ம.இ.கா களத்தில் இறங்கி உதவியதைப் போல், மற்ற உறுப்புக் கட்சிகள் ம.இ.காவின் வெற்றிக்கு உரிய ஒத்துழைப்பை வழங்கவில்லை என, அதன் தேசிய உதவித் தலைவர் டத்தோ T. முருகையா ஏமாற்றமும் வருத்தமும் தெரிவித்துள்ளார்.
போட்டியிட்ட 25 இடங்களில் 18 இடங்களில் பாரிசான் வெற்றிப் பெற்றது; அவற்றில் 16 இடங்களில் அம்னோவும், 2 இடங்களில் ம.சீ.சவும் வென்றன.
ஆனால், ம.இ.கா சார்பில் சிரம்பான் ஜெயாவில் களமிறங்கிய தினாளன் T ராஜகோபாலுவும், ஸ்ரீ தஞ்சோங்கில் போட்டியிட்ட A. அச்சுதனும் தோல்வியுற்றனர்.
இதனால் 2018 பொதுத் தேர்தலுக்குப் பிறகு நெகிரி சட்டமன்றத்திற்குள் நுழைய முடியாமல் தவிக்கும் ம.இ.கா, மேலும் ஐந்தாண்டுகளுக்கு அதே நிலையை எதிர்கொள்ளும் சூழல் உருவாகியுள்ளது; 2023 மாநிலத் தேர்தலில் ம.சீ.சவும் ம.இ.காவும் போட்டியிடவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
ம.இ.கா வேட்பாளர்களின் தோல்வி குறித்து ஏமாற்றம் தெரிவித்த டத்தோ முருகையா, பாரிசான் உறுப்புக் கட்சிகள் மட்டுமின்றி, பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களின் வெற்றிக்காக ம.இ.கா கடுமையாக உழைத்தது.
ஆனால் ம.இ.கா போட்டியிட்ட 2 தொகுதிகளிலும் வாக்காளர்கள் குறிப்பாக மலாய்க்காரர்களின் வாக்குகளைத் திரட்டுவதில் பாரிசான் மற்றும் பெரிக்காத்தான் உறுப்புக் கட்சிகள் முறையான பங்களிப்பைத் தரவில்லை என, ஆதங்கம் தெரிவித்தார்.
எனவே, ஜோகூரைப் போன்று நெகிரியிலும் பாரிசானின் நீல அலை வீசிய போதும், மாநில அரசில் ம.இ.காவினர் இடம்பெற முடியாமல் போயுள்ளது.
ஆட்சியைப் பிடித்தால் ம.இ.காவின் 2 சட்டமன்ற உறுப்பினர்களும் ஆட்சிக் குழுவில் இடம்பெறுவர் என, பாரிசான் தலைவர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி வாக்குறுதி அளித்திருந்தார்.
அவர் சொன்னபடி, 8 ஆண்டுகளுக்குப் பிறகு பாரிசான் ஆட்சிக் கட்டிலில் அமர்ந்துள்ளது; ஆனால் ஆட்சிக் குழுவில் இடம் பெறும் வாய்ப்பை ம.இ.கா இழந்துள்ளது.
இதனால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு மாநில அரசில் இந்தியச் சமுதாயத்தின் பிரதிநிதித்துவம் இல்லாமல் போவது பேரிழப்பாகும் என முருகையா கவலையுடன் கூறினார்.



