
கோலாலம்பூர், ஆகஸ்ட்-4-தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து DAP கட்சியின் நெகிரி செம்பிலான் மாநிலத் தலைவர் பொறுப்பிலிருந்து அந்தோணி லோக் விலகியுள்ளார்.
அதே சமயம், ஒற்றுமை அரசாங்கத்தில் DAP நீடிப்பது குறித்து முடிவெடுக்கச் சிறப்புத் தேசிய மாநாடு கூட்டப்படும் என்றும் போக்குவரத்து அமைச்சருமான அவர் அறிவித்துள்ளார்.
கட்சியின் நேற்றைய செயற்குழுக் கூட்டத்திற்குப் பின் பேசிய அந்தோணி லோக் , ‘சென்னா’ தொகுதியை பாரிசான் நேஷனல் சார்பில் போட்டியிட்ட ம.சீ.ச வேட்பாளரிடம் 688 வாக்குகள் வித்தியாசத்தில் இழந்தது உட்பட, இரு தொகுதிகளின் தோல்விக்குப் பொறுப்பேற்று மாநிலத் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாகக் கூறினார்.
2002-ஆம் ஆண்டு முதல் மாநிலத்தை வழிநடத்தி வந்த நிலையில், அடுத்த தலைமுறையிடம் பொறுப்பை ஒப்படைப்பதாக அவர் தெரிவித்தார்.
அதேவேளை, ஆகஸ்ட் 16-ஆம் தேதி சிறப்புத் தேசிய மாநாட்டில், பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் மடானி அரசாங்கத்தில் கட்சித் தொடர்ந்து நீடிக்க வேண்டுமா என்பது குறித்த முக்கியத் தீர்மானத்தின் மீது சுமார் 4,000 பேராளர்கள் வாக்களித்து முடிவெடுப்பார்கள் என்றும், இம்முடிவைக் கட்சியோ அல்லது மத்திய செயற்குழுவோ எடுக்காது என்றும் அவர் வலியுறுத்தினார்.
மாநிலப் பொறுப்பிலிருந்து விலகினாலும், அந்தோணி லோக் தொடர்ந்து கட்சியின் பொதுச்செயலாளராக நீடிக்க மத்திய செயற்குழு முழு ஆதரவு அளித்துள்ளது.
நெகிரி செம்பிலான் DAP புதிய தலைவரை இந்த வாரம் தேர்வு செய்கிறது.



