![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/b2e34d90-d4bd-4529-a883-78fc7061fb4c-780x470.jpg)
பினாங்கில், பட்டவொர்த் வெளிவட்ட விரைவுச் சாலை BORR -ரில் வாகனங்களை இஷ்டம் போல் நிறுத்தி வைக்கும் செயல்களை போலீஸ் சாடியிருக்கிறது.
அவ்வாறு போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்கும் வாகனங்களின் உரிமையாளர்கள் மீது அமுலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என பினாங்கு போலீஸ் துணைத் தலைவர் டத்தோ மொஹமட் உசுஃப் ஜான் மொஹமட் எச்சரித்தார்.
எனினும், இதுவரை அது குறித்து புகார் எதுவும் வரவில்லை என்றார் அவர்.
BORR நெடுஞ்சாலையை ஏதோ கார் நிறுத்துமிடம் போல் பாவித்து, வாகனங்கள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வீடியோ வைரலாகியிருப்பது குறித்து அவர் கருத்துரைத்தார்.
வெளியில் நோன்புத் துறக்கும் கலாச்சாரத்தை என்னால் புரிந்துக் கொள்ள முடிகிறது; அதே சமயம் மற்ற சாலைப் பயனர்களின் வசதியையும் சம்பந்தப்பட்ட வாகனமோட்டிகள் புரிந்து கொள்ள வேண்டும் என மொஹமட் உசுஃப் நினைவுறுத்தினார்.
எனவே, அப்பகுதியில் அடிக்கடி சோதனை நடத்தப்படும் என்றார் அவர்.
அந்த நெடுஞ்சாலையில் நோன்புத் துறக்கும் நேரத்திற்கு முன்பில் இருந்து அதிகாலை வரை வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக, வைரலாகியுள்ள வீடியோவின் கீழ் நெட்டிசன் ஒருவர் கருத்து பதிவேற்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.