
கோலாலம்பூர், செப்டம்பர் 7 – மலேசியாவின் சிறப்பு பேரிடர் உதவி மற்றும் மீட்புக் குழுவான SMART MAS-01, நேப்பாளத்தின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் மீட்புப் பணிகளை மேற்கொள்ள நேப்பாளத்தின் திரிஷூலி பசாரை (Trishuli Bazar) சென்றடைந்துள்ளது.
தேசிய பேரிடர் மேலாண்மை முகமை (NADMA) தலைமை இயக்குநர் டத்தோ மீயோர் இஸ்மாயில் மீயோர் அகிம் கூறுகையில், குழு தனது செயல்பாட்டு தளமாக இராணுவ முகாமை அமைத்துள்ளதாக தெரிவித்தார்.
11 உறுப்பினர்களைக் கொண்ட SMART குழு, சனிக்கிழமை காலை 9 மணிக்கு சுபாங் விமானத் தளத்திலிருந்து ராயல் மலேசிய விமானப்படையின் A400M விமானம் மூலம் நேப்பாளம் புறப்பட்டது. மீட்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகளுக்குத் தேவையான உபகரணங்களையும் குழு கொண்டு சென்றுள்ளது.
SMART குழு நேப்பாளத்தில் 7 முதல் 10 நாட்கள் தங்கிப் பணியாற்றுமென எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், ஆகஸ்ட் 26ஆம் தேதி ஏற்பட்ட கடுமையான திடீர் வெள்ளத்துக்குப் பின்னர் தொடர்பு கொள்ள முடியாமல் போன 55 மலேசியர்களின் நிலை இன்னும் தெரியவில்லை.



