
கோலாலம்பூர், ஜூலை 31 – பங்சாரிலுள்ள 99 ஸ்பீட்மார்ட் கிளையொன்றில், திருட்டில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்பட்ட ஆடவருக்கும் அதன் ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சம்பவம் தொடர்பான காணொளி சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, 99 ஸ்பீட்மார்ட் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், விசாரணையின் முடிவுக்காகக் காத்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.
அந்தக் காணொளியில், சில ஊழியர்கள் சம்பந்தப்பட்ட ஆடவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதுடன், நிலைமை பின்னர் கைகலப்பாக மாறுவதையும் காண முடிகிறது. அந்த ஆடவர் கடையில் பொருளைத் திருடியதாகச் சந்தேகிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், சம்பவத்தின் முழுமையான பின்னணி மற்றும் அதற்கு வழிவகுத்த சூழ்நிலைகள் குறித்து அதிகாரப்பூர்வ விசாரணை நடைபெற்று வருவதால், பொதுமக்கள் ஊகங்களைப் பரப்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தனது ஊழியர்கள் நிறுவனத்தின் விதிமுறைகள் அல்லது செயல்பாட்டு நடைமுறைகளை மீறியிருப்பது விசாரணையில் உறுதிசெய்யப்பட்டால், அவர்களுக்கு எதிராகத் தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என 99 ஸ்பீட்மார்ட் தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினரின் வாக்குமூலங்கள் மற்றும் கிடைக்கப்பெற்ற ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



