
மலாக்கா, ஜூன்-19 – மடக்கும் கத்தியால் சொந்த தாய் மற்றும் அண்ணனைக் குத்திக் கொன்றதோடு, தம்பிக்கு படுகாயம் விளைவித்ததாக, ஐந்தாம் படிவ மாணவர் மலாக்காவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.
வயது குறைந்த மாணவர் என்பதால், ஆயர் குரோ மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், வெளியார் யாருமின்றி குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
கடந்த வாரம் தாமான் ராம்பாய் முத்தியாராவில் உள்ள வீட்டில் 51 வயது தாய், 21 வயது அண்ணன் இருவரையும் கொலைச் செய்ததாக முதலிரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
13 வயது தம்பியை கத்தியால் குத்தி படுகாயம் ஏற்படுத்தியதாக மூன்றாவது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.
எனினும் கொலை வழக்கு உயர் நீதிமன்ற அதிகாரத்தின் கீழ் வருவதால், 17 வயது அப்பையனிடமிருந்து வாக்குமூலம் எதுவும் பதிவுச் செய்யப்படவில்லை.
இதற்கு முன் ஆசிரியையும் அவரின் மூத்த மகனும் உடலில் கத்திக் குத்துக் காயங்களுடன் இரத்த வெள்ளத்தில் இறந்துகிடக்க கண்டெடுக்கப்பட்டனர்.
படி படி என வீட்டில் வற்புறுத்தப்பட்டதாலும் சிறந்த மதிப்பெண்களைப் பெற வேண்டுமென கட்டாயப்படுத்தப்பட்டதாலும் ஏற்பட்ட மன உளைச்சலில், அவன் அவ்வாறு செய்தது போலீஸின் தொடக்கக் கட்ட விசாரணையில் தெரிய வந்தது