![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/3f99083e-af57-493f-b116-97caf389f2dd.jpg)
ஜொகூர் பாரு, மார்ச் 17 – ஜொகூர் பாசீர் கூடாங்கில் பதின்ம வயதுப் பையனை அடித்துக் காயப்படுத்தி, கடத்திச் சென்ற உள்ளூர் ஆடவர்கள் மூவர் கைதாகியுள்ளனர்.
கோத்தா மாசாயில் உள்ள வீடமைப்புப் பகுதியில் வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு அச்சம்பவம் நிகழ்ந்தது.
அங்கு திடீரென வந்த கும்பலொன்று, 17 வயது அப்பையனைப் பிடித்து தலைக்கவசங்கள் கொண்டு பலமாக அடித்திருக்கிறது.
பிறகு அவனை புரோட்டோன் சத்ரியா காரின் bonnet-டுக்கு இழுத்துப் போட்டு அங்கிருந்து விருட்டென கிளம்புவது, வைரலாகியுள்ள வீடியோவில் தெரிகிறது.
அப்பையனை அருகேயுள்ள மற்றொரு வீட்டுக்குக் அக்கும்பல் கொண்டுச் சென்றது விசாரணையில் தெரிய வந்ததாக ஸ்ரீ ஆலாம் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிடெண்டண்ட் மொஹமட் சொஹாய்மி இஷாக் தெரிவித்தார்.
அங்கு அவனைக் கட்டிப் போட்டு லத்தி உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு அக்கும்பல் தாக்கியது; அதில் அவனது கன்னம், கழுத்து, தோள் மற்றும் முதுகில் காயம் ஏற்பட்டதோடு, காதில் இரத்தக் கசிவும் ஏற்பட்டது.
இதையடுத்து பாசீர் கூடாங்கில் வெவ்வேறு இடங்களில் வைத்து 15 முதல் 37 வயது வரையிலான மூன்று சந்தேக நபர்களும் கைதானதாக சொஹாய்மி சொன்னார்.
அவர்களில் ஒருவன், போதைப் பொருள் மற்றும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் ஏற்கனவே 26 குற்றப்பதிவுகளைக் கொண்டவன் என்பதும் விசாரணையில் அம்பலமானது.
சம்பவத்திற்கான காரணம் கண்டறியப்பட்டு வரும் நிலையில், இன்னும் வெளியில் உள்ள அக்கும்பலைச் சேர்ந்த எஞ்சிய உறுப்பினர்களுக்கும் போலீஸ் வலை வீசியுள்ளது.
நேரில் பார்த்த சாட்சிகள் யாராவது இருப்பின், ஸ்ரீ ஆலாம் மாவட்ட போலீஸ் நிலையத்தைத் தொடர்புக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.