![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/WhatsApp-Image-2024-03-18-at-2.26.21-PM-3-780x470.jpeg)
ஜோர்ஜ் டவுன், மார்ச் 18 – உணவு உட்கொள்ள வரும் வாடிக்கையாளர்கள், பானம் ‘ஆர்டர்’ செய்யாவிட்டால், கட்டணம் விதிக்கும் உணவகங்களை புறக்கணிக்குமாறு, CAP எனும் பினாங்கு பயனீட்டாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
உணவக உரிமையாளர்களுக்கு அது போன்ற அறிவிப்பை வெளியிட எந்த ஓர் உரிமையும் இல்லை என, பினாங்கு பயனீட்டாளர் சங்கத் தலைவர் மொஹிடின் அப்துல் காடீர் தெரிவித்தார்.
உணவக உரிமையாளர்கள், தாங்கள் விற்பனை செய்யும் உணவு வகைகள் மற்றும் அவற்றின் விலையை மட்டுமே காட்சிக்கு வைக்க முடியும்.
அதனை விடுத்து, பானம் ஆர்டர் செய்யாத வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் கட்டணம் விதிப்பது மிகவும் மோசமான ஒரு நடவடிக்கை என மொஹிடின் சாடினார்.
அதனால், அதுபோன்ற நடவடிக்கைகளை, உள்நாட்டு வாணிப வாழ்க்கை செலவீன அமைச்சு கடுமையாக கருத வேண்டும் என்பதோடு, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென மொஹிடின் கேட்டுக் கொண்டுள்ளார்.
அதே சமயம், அதுப்போன்ற உணவகங்களை வாடிக்கையாளர்கள் புறக்கணிக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தினார்.
முன்னதாக, பினாங்கில், பானம் ஆர்டர் செய்யாத ஒவ்வொரு மேஜைக்கும், இரண்டு ரிங்கிட் கட்டணம் விதிக்கப்படும் என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டிருந்த உணகவம் ஒன்று வைரலானது.
Puchong News Group எனும் சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள அது தொடர்பான புகைப்படத்திற்கு கண்டனங்கள் வலுத்து வருவதும் குறிப்பிடத்தக்கது.