![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/cdn4.premiumread-6.jpg)
ஜியோர்ஜ்டவுன், மார்ச் 9 – பினாங்கில் பிணைப்பணத்திற்காக கடத்தப்பட்ட உணவக உரிமையாளரான 30 வயது சீன பிரஜை, பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளார்.
மார்ச் ஏழாம் தேதி ஜியோர்ஜ்டவுனில் உள்ள ஹோட்டல் ஒன்றில் இருந்து தனது கணவர் கடத்தப்பட்டதாக பெண்ணொருவர் கொடுத்தப் புகாரை அடுத்து, போலீஸ் பணிப் படை அமைக்கப்பட்டது.
விசாரணையின் பலனாக, புக்கிட் காம்பீரில் உள்ள வீட்டொன்றில் இருந்து அவரை போலீஸ் காப்பாற்றியது.
கடத்தியவர்கள் என நம்பப்படும் நால்வர் கைதுச் செய்யப்பட்டு, பிணைப்பணமாகப் பெறப்பட்ட 277,886 ரிங்கிட்டும் பறிமுதல் செய்யப்பட்டது.
32 முதல் 40 வயதுக்குட்பட்ட சந்தேக நபர்கள் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்; அவர்களில் மூவர் சீன பிரஜைகள் ஆவர்.
அக்கடத்தல் கும்பலைச் சேர்ந்த மேலும் மூன்று சீன பிரஜைகளுக்கு வலை வீசியுள்ள போலீஸ், கடத்தலுக்கான உண்மைக் காரணத்தைக் கண்டறிய விசாரணைத் தொடருவதாக கூறியது.