![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/02/MixCollage-12-Feb-2024-12-05-PM-4429.jpg)
கோலாலம்பூர், பிப் 12 – பினாங்கு முதலமைச்சர் சௌ கோன் இயோவ் மற்றும் DAP-யின் தலைவர் லிம் குவான் எங் ஆகியோருக்கிடையே ஏற்பட்டுள்ள தகராறு எதிர்காலத்தில் அக்கட்சிக்கு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்துரைத்துள்ளனர். அந்த இரு தலைவர்களுக்கிடையே ஏற்பட்டுள்ள மோதல் மேலும் விரிசல் அடைந்தால் DAP ஆதரவாளர்கள் விரக்தி அடையக்கூடும் என்பதோடு இறுதியில் எதிர்கால தேர்தலில் அவர்கள் DAP-க்கு வாக்களிக்க மாட்டார்கள் என அனைத்துலக விவகாரங்கள் கழகத்தின் அரசியல் ஆய்வாளர் ஓ எய் சுன் தெரிவித்திருக்கிறார்.
பினாங்கு அரசாங்கத்தை லிம் குவான் எங் தொடர்ந்து குறைகூறி வந்தால் பொதுமக்கள் மத்தியில் கட்சிக்கு மோசமான தோற்றம் ஏற்படலாம் என மலேசிய அறிவியல் பல்கலைக்கழகத்தின் அரசியல் ஆய்வாளர் அஸ்மில் தாயேப் கூறினார். பினாங்கு அரசாங்கத்தை பகிரங்கமாக குற்றச்சாட்டும் லிம் குவான் எங் போக்கினால் DAP ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தலாம் என அவர் கூறினார். லிம் குவான் எங் DAP-யில் செல்வாக்கு உள்ளவராக இருந்தாலும் பினாங்கு அரசியலில் அவரது ஆளுமை குறைந்துவிட்டது. அவர் தேசிய நிலையிலான அரசியல் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும் என அகாடமி நுசந்தராவின் அஸ்மி ஹாசன் தெரிவித்தார். பினாங்கு மாநில அரசாங்கம் சுதந்திரமாக செயல்படுவதற்கு லிம் குவான் எங் அனுமதிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.