![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/11/MixCollage-28-Nov-2023-03-14-PM-6449.jpg)
சென்னை , நவ 28 – தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் மகள் துவாரகாவின் பெயரில் மாவீரர் நாளான நேற்று வெளியான காணொளியின் நம்பகத்தன்மை குறித்து இந்தியா மட்டும் வெளிநாடுகளில் உள்ள தமிழ் மக்களிடையே புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அந்த காணொளி நவம்பர் 27ஆம் தேதி திங்கட்கிழமை மாலை இணையத்தில் வெளியாகியுள்ளது. தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுடன் தொடர்பில் இருப்பதாக கூறப்படும் இயக்குனர் வா.கௌதமன் சென்னையில் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார். தனக்கு தெரியாத இடத்திலிருந்து அழைப்பு வந்ததாகவும், அந்த நபர் தன்னை விடுதலைப் புலிகளின் தலைவரின் மகள் என்று அடையாளம் கூறிக்கொண்டதாகவும் கௌதமன் தெரிவித்தார்.
புலிகளால் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27 அன்று கொண்டாடப்படும் மாவீரர் தினத்தை நினைவுகூரும் வகையில் துவாரகா பொதுவில் தோன்றி தனது உரையை நிகழ்த்துவார் என்றும் அவர் கூறியிருந்தார். திங்கட்கிழமை மாலை, தமிழ்ஒளி.நெட் மற்றும் அதன் சமூக ஊடகப் பக்கத்தில், விடுதலைப் புலிகளின் தலைவரின் மகள் என்று கூறிக்கொள்ளும் நபர் 10 நிமிடங்கள் பேசியதாகக் கூறப்படும் வீடியோ நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது. இலங்கையின் வடமாகாணத்தில் முள்ளிவாய்க்காலில் இறுதிக்கட்ட மோதலின் போது தமிழ்ப் புலிகள் தோற்கடிக்கப்பட்டது, தீவு தேசத்திற்கு ஆதரவான பிற நாடுகளின் உதவியினால்தான் சாத்தியமானது என்று அவர் குற்றம் சாட்டினார்.
மக்களின் உதவியுடன் போராடிய புலிகள் தந்திரமாக தோற்கடிக்கப்பட்டனர் என்று குற்றஞ்சாட்டிய அவர் தமிழீழம் என்ற தனி நாட்டை அடைவதற்கான அடுத்த கட்டம் அரசியல் நகர்வுகளால் மட்டுமே சாத்தியமாகும் என்றும் அவர் கூறினார். தம்மை துவாரகை என்று கூறிக்கொண்ட அவர் , இலங்கை, தமிழ்நாடு மற்றும் பிற நாடுகளில் வாழும் தமிழ் மக்களிடம் “சுதந்திரப் போராட்டத்தை” அரசியல் ரீதியாக முன்னெடுத்துச் சென்று தங்கள் ஆதரவைத் தெரிவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.