![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/04/WhatsApp-Image-2024-04-26-at-2.59.28-PM-4.jpeg)
பெட்டாலிங் ஜெயா, ஏப்ரல் 26 – தலைநகர், பிரிக்பீல்ட்ஸ்சிலுள்ள, “கொண்டோமினியம்” ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் கார் நிறுத்தும் இடத்தில், காதல் ஜோடி ஒன்றின் காரை மோதித் தள்ளிய ஆடவன் ஒருவன் கைதுச் செய்யப்பட்டுள்ளான்.
முதலில், அந்த குடியிருப்பிலுள்ள வீடொன்றில், காதலர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தால் சினமடைந்த அவ்வாடவர், பின்னர் கார் நிறுத்தும் இடம் வரை அச்சத்தம் தொடர்ந்ததால், சினமடைந்து அவர்களின் காரை மோதித் தள்ளியதாக கூறப்படுகிறது.
அச்சம்பவம் தொடர்பான 27 வினாடி காணொளி ஒன்று நேற்று தொடங்கி வைரலாகியுள்ளதை, போலீஸ் அடையாளம் கண்டிருப்பதாக, பிரிக்பீல்ட்ஸ் போலீஸ் தலைவர் அசிஸ்டன் கமிஸ்னர் கு மஷாரிமான் கு மாஹ்மூட் ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தார்.
அச்சம்பவம் தொடர்பில், 40 வயது ஆடவர் ஒருவரிடமிருந்து புகார் கிடைத்திருப்பதையும் மஷாரிமான் உறுதிப்படுத்தியுள்ளார்.
அச்சம்பவம் இம்மாதம் 22-ஆம் தேதி, பிற்பகல் மணி 2.15 வாக்கில், சம்பந்தப்பட்ட காதல் ஜோடி, தங்கள் வீட்டில் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்த போது நிகழ்ந்துள்ளது.
அதே வீட்டில் வாடகைக்கு தங்கி இருந்த சந்தேக நபர், அவர்களின் வாக்குவாதத்தால் முதலில் எரிச்சல் அடைந்துள்ளான். அந்த சத்தம் வாகனம் நிறுத்தும் இடம் வரை தொடரவே சினமடைந்த அவன், அவர்களின் காரை மோதித் தள்ளியதாக கூறப்படுகிறது.
எனினும், அச்சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை. கார் மட்டுமே பழுதடைந்தது.
அச்சம்பவம் தொடர்பில், கடந்த புதன்கிழமை தொடங்கி விசாரணைக்காக மூன்று நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆடவனுக்கு எதிராக, ஏற்கனவே பழைய குற்றப்பதிவுகள் பல இருப்பது தெரிய வந்துள்ள வேளை ; அவன் போலீசாரால் தேடப்பட்டு வந்தவன் என்பதும் தெரிய வந்துள்ளது.