![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/11/MixCollage-25-Nov-2023-11-35-AM-4406.jpg)
பெட்டாலிங் ஜெயா, நவ 25 – இன்றும் நாளையும் நடைப்பெறுகின்ற பி.கே.ஆர் கட்சியின் ஆண்டுப் பொதுப் பேரவையில் அன்வார் இரண்டாவது முறையாக பிரதமர் எனும் முறையில் கலந்துக் கொள்ளும் வேளையில் அக்கட்சியைச் சேர்ந்த மலாய்க்காரர்கள் அல்லாதவர்களின் எதிர்ப்பார்ப்பை எப்படி ஈடு செய்யப் போகிறார் எனும் கேள்வியோடு பல பேராளர்கள் காத்திருக்கின்றனர்.
கடந்த 15வது பொதுத் தேர்தலில் 80லிருந்து 90 விழுக்காடு வரை மலாய்க்காரர்கள் அல்லாதவர்களின் பெரும்பான்மை ஆதரவோடு ஆட்சியைப் பிடித்த அன்வார் பொறுப்புக்கு வந்தப் பிறகு அவர் வாக்குறுதி அளித்த பல்வேறு சீர்த்திருத்தங்கள் மற்றும் கொள்கை மாற்றங்கள் இன்னும் மேற்கொள்ளப்படாமல் இருப்பது அவர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
அவரது அண்மையக் கால அணுகுமுறைகள் நாட்டின் பெரும்பான்மை சமூகமான மலாய்-முஸ்லிம் சமூகத்தின் ஆதரவை திரட்டுவதில் மட்டும் குறியாக இருக்கிறாரா என்ற கேள்வி அவரது கட்சி உறுப்பினர்களிடையேகூட எழுந்துள்ளது.
அமைச்சரவையில் பி.கே.ஆர் கட்சியைச் சேர்ந்த ஒரு இந்தியர் கூட அமைச்சராக நியமிக்கப்படாததும், மாநிலங்களில் ஆட்சிக் குழு உறுப்பினர்களாக நியமிக்கப்படாததும் இந்திய சமூகத்தில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
அன்வார், அம்னோ, பாஸ், பெர்சத்து, அமனா ஆகிய கட்சிகளோடு போட்டியிட்டு பழமைவாத மலாய்க்காரர்களின் வாக்கை தன் பக்கம் இழுக்க முயற்சிக்கப் போகிறாரா அல்லது தனது அடிப்படை ஆதரவாளர்களான மலாய்க்காரர்கள் அல்லாதவர்கள், மிதமான போக்குடைய மலாய்க்காரர்கள் அவர்களின் ஆதரவை தற்காக்கப் போகின்றாரா எனும் கேள்வியோடு பேராளர்கள் அன்வாரின் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென்பதை அறிய ஆவலோடு காத்திருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
ஆட்சியை நிலைநிறுத்த வேண்டும், பொருளாதாரத்தை வலுப்பெற செய்ய வேண்டும், சீர்த்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனும் பல்வேரு சவால்களை அன்வார் கடக்க வேண்டும் எனும் நிர்பந்தம் இருப்பதோடு அதற்கு கால அவகாசம் தேவை என்றாலும் கடந்த 25 ஆண்டுகளாக அவர் பிரதமராக வர வேண்டும் என்ற வேட்கையில் பல போரட்டங்களைச் சந்தித்து எல்லா நிலையிலும் ஆதரவாக நின்ற மலாய்க்காரர்கள் அல்லாத மற்றும் மிதவாத மலாய்க்காரர்களின் ஆதரவை அவர் புறக்கணிக்க மாட்டார் என தாங்கள் எதிர்ப்பார்ப்பதாக சில தலைவர்கள் கருத்துரைத்துள்ளனர்.