![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/IMG_1711-1024x681-1.jpeg)
புக்கிட் மெர்தாஜாம், ஜூன் 10 – பினாங்கு, புக்கிட் மெர்தாஜாம் பேருந்து நிலையத்தில், மாநில குடிநுழைவுத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனை நடவடிக்கையில், பல நாடுகளை சேர்ந்த 20 கள்ளக்குடியேறிகள் கைதுச் செய்யப்பட்டனர்.
நேற்று நண்பகல் மணி 2.30 வாக்கில் அந்த சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அப்பொழுது, சம்பந்தப்பட்ட பேருந்து நிலையத்தில் இருந்த மொத்தம் 198 அந்நிய நாட்டவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக, பினாங்கு குடிநுழைவுத் துறை ஓர் அறிக்கையின் வாயிலாக தெரிவித்தது.
எனினும், அதில் இருபது பேர் மட்டுமே முறையான பயண ஆவணங்களை வைத்திருக்காததோடு, அவர்களில் சிலர் அனுமதிக்கப்பட்டதைக் காட்டிலும் கூடுதல் நாட்கள் நாட்டில் தங்கி இருந்ததும் தெரிய வந்துள்ளது.
கைதுச் செய்யப்பட்ட அனைவரும், ஆறு வயதுக்கும் 45 வயதுக்கும் இடைப்பட்ட, நேப்பாளம், இந்தோனேசியா, வங்காளதேசம், மியன்மார் ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் ஆவர்.
அவர்கள் அனைவரும் மேல் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.