பெங்களூரு, மார்ச் 2 – பெங்களூருவில் உள்ள பிரபல ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நேற்று மதியம் பரபரப்பான உணவு நேரத்தில் குண்டு வெடித்ததில் குறைந்தது 9 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் வைதேஹி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறைந்த தாக்கத்தைக் கொண்ட குண்டு வெடித்ததில் சிலர் காயம் அடைந்ததை கர்நாடகா மாநிலை முதலமைச்சர் சித்தராமையா உறுதிப்படுத்தினார். அந்த குண்டு வெடிப்பிற்கான உண்மையான காரணம் தெரியவில்லை.
அந்த உணவகத்திற்கு வந்த மர்ம நபர் ஒருவர் வைத்துவிட்டுச் சென்ற பையில் இருந்த குண்டு வெடித்தாக தொடக்கக் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த உணவகத்தின் சிசிடிவி கேமராவில் பதிவான காணொளியின் அடிப்படையில் இந்த குண்டு வெடிப்புச் சம்பவம் தொடர்பில் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் சம்பந்தப்பட்ட சந்தேகப் பேர்வழிக்கு 30 முதல் 35 வயது இருக்கும் என மாநில துணை முதல்வர் டி,கே சிவக்குமர் தெரிவித்திருக்கிறார். அந்த சந்தேக நபர் இட்லி வாங்கிக் கொண்டு அதை சாப்பிடமால் பையை மட்டும் விட்டுச் சென்றதாகவும் கூறப்பட்டது.