![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/MixCollage-08-Jun-2024-02-44-PM-5996.jpg)
செமினி, ஜூன் 8- பேங்காக்கில் ஆசிய பசிபிக் இண்டர்நேஷனல் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இம்மாதம் 1 ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை நடைபெற்ற 2024 அனைத்துலக வெற்றியாளர் கிண்ண ஆங்கில மொழி பேச்சுப் போட்டியில் செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளியைச் சேர்ந்த வேதாஸ்ரீ பாலகிருஷ்ணன் வெள்ளி பதக்கமும் தாமிரா நாகலிங்கம் வெண்கல பதக்கமும் வென்றனர். பல்வேறு வகையான போட்டிகளை உள்ளடக்கிய இந்த வெற்றியாளர் கிண்ணப் போட்டியில் மலேசியா உட்பட சிங்கப்பூர், புருணை, சீனா,இங்கிலாந்து, இந்தியா, தாய்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 160 பேர் கலந்து கொண்டனர்.
அந்த வகையில் பேச்சுப் போட்டியில் 14 போட்டியாளர்கள் கலந்து கொண்டு வெவ்வேறு தலைப்புகளில் பேசினர். இதில் இணைய பகடிவதை குறித்து பேசிய வேதாஸ்ரீ பாலகிருஷ்ணன் வெள்ளி பதக்கத்தை வென்ற வேளையில், மாணவர்களிடையே ஏற்படும் மன உளைச்சல் குறித்து பேசிய தாமிரா நாகலிங்கம் வெண்கலப் பதக்கத்தை வென்றார். இந்த மாணவர்கள் அனைவரும் ஆசிரியர் ஷாமினி கிருஷ்ணன் தலைமையில் இப்போட்டியில் கலந்து கொண்டனர். இதில் பெற்றோர்களும் உடன் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடயே வெற்றி பெற்ற மாணவர்களுக்கம் அவர்களை தயார்படுத்திய ஆசிரியர்களுக்கும் தேசிய, அனைத்துலக ரீதியிலான போட்டிகளில் வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்ற மாணவர்களுக்கும் அவர்களுக்கு பயிற்சியளித்த ஆசிரியர்களுக்கும் செமினி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் கு.நெடுஞ்செழியன் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.