ஈப்போ, பிப் 7 – ஈப்போவில்ஜாலான் தஞ்ஜோங் ரம்புத்தானில் வீசிய புயலின்போது பலகை வீடு ஒன்றில் பெரிய மரம் விழுந்ததில் அவ்வீட்டிலிருந்த ஆடவர் ஒருவர் மரணம் அடைந்ததோடு மேலும் ஐவர் காயம் அடைந்தனர். அருகேயுள்ள நினைவு பூங்காவில் வேலை செய்துவரும் இந்தோனேசிய ஆடவர் இறந்ததை சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு மாலை மணி 6.15 அளவில் வந்த மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியதாக பேரா தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் நடவடிக்கை அதிகாரி சைபுல் ரிசான் சுலைமான் தெரிவித்தார். அந்த வீட்டில் இருந்த இதர நான்கு இந்தோனேசிய ஆடவர்கள் சொற்ப காயத்திற்கும் மற்றொருவர் கடுமையான காயத்திற்கும் உள்ளானார். அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக ராஜா பெர்மைசூரி பைனுன் மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டனர். மாலை மணி 5.45 அளவில் தங்களுக்கு கிடைத்த அவசர அழைப்பின்போது அவ்வீட்டில் எழுவர் இருந்ததாக கூறப்பட்டதாகவும் எனினும் அங்கு அறுவர் மட்டுமே இருந்தது பின்னர் உறுதிப்படுத்தப்பட்டதாக சைபுல் கூறினார்.
Related Articles
Check Also
Close