![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/11/MixCollage-30-Nov-2023-04-31-PM-472.jpg)
சிரம்பான், நவம்பர் 30 – பொது பல்கலைக்கழக மாணவியை மானபங்கம் செய்த குற்றச்சாட்டை மறுத்து, சிரம்பான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், லோரி ஓட்டுனராக பணிப்புரியும் ஆடவன் ஒருவன் இன்று விசாரணை கோரினான்.
34 வயது முஹமட் அம்ஸ்யார் முஹமட் அலி எனும் அந்த ஆடவன், 21 வயது பல்கலைக்கழக மாணவியை மானபங்கம் செய்ய வேண்டும் எனும் நோக்கத்தில், வன்முறையை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளான்.
குற்றவியல் சட்டத்தின் 354-வது பிரிவின் கீழ், குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் பத்தாண்டுகள் சிறைத் தண்டனை அல்லது அபராதம் அல்லது பிரம்படி அல்லது அதில் இரண்டு விதிக்கப்படலாம்.
அதே சமயம், சம்பந்தப்பட்ட பெண்ணுக்கு சொந்தமான சம்சோங் A71 ரக கைபேசியை திருடியதாக சுமத்தப்பட்ட மற்றொரு குற்றச்சாட்டையும் மறுத்து அவன் விசாரணை கோரினான்.
அந்த குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சம் பத்தாண்டுகள் சிறைத் தண்டனையுடன், அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.
நவம்பர் ஆறாம் தேதி, தாமான் சிரம்பானிலுள்ள, வீடொன்றில் அவன் அக்குற்றங்களை புரிந்ததாக தெரிவிக்கப்பட்டது.
நான்காயிரத்து 500 ரிங்கிட் உத்தரவாதத் தொகையிலும், சாட்சியாளர்களை நெருங்கி தொல்லை தரக்கூடாது எனும் கூடுதல் நிபந்தனையோடும் அவ்வாடவன் இன்று விடுவிக்கப்பட்ட வேளை; இவ்வழக்கு விசாரணை ஜனவரி மூன்றாம் தேதி செவிமடுக்கப்படும்.