Latestமலேசியா

பொந்தியானில், கார் மரத்தில் மோதி தீப்பிடித்தது; மூன்று ஆடவர்கள் நூலிழையில் உயிர் தப்பினர்

பொந்தியான், டிசம்பர் 8 – கம்போங் ரம்பா பள்ளி வாசலுக்கு முன், நள்ளிரவு வாக்கில், புரோட்டோன் வீரா ரக கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதி தீப்பிடித்த சம்பவத்தில், அக்காரில் பயணித்த மூன்று ஆடவர்கள் நூலிழையில் உயிர் தப்பினர்.

அவ்விபத்து தொடர்பில், பொதுமக்களிடமிருந்து அவசர அழைப்பு கிடைத்ததாக, பொந்தியான் தீயணைப்பு மீட்பு நிலையத்தின் நடவடிக்கை பிரிவு கொமண்டோ முஹமட் நஸ்ரி அஹ்மாட் சாஹிடோன் தெரிவித்தார்.

தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்தை சென்றடைந்த போது, கார் முற்றாக தீக்கிரையாகி இருந்தது.

எனினும், அந்த காரில் பயணித்த 19 வயதுக்கும் 30 வயதுக்கும் இடைப்பட்ட மூன்று ஆடவர்கள், காரில் தீ முழுமையாக பரவுவதற்கு முன் அதிலிருந்து வெளியேறி தப்பி விட்டனர்.

தீ சிறிது நேரத்தில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட வேளை; அச்சம்பவத்தில் காயமடைந்தவர்கள் பொந்தியான் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இவ்வேளையில், தீக்கிரையான காரின் உரிமையாளர், அவ்விபத்து குறித்து இன்னும் போலீஸ் புகார் செய்யவில்லை என, பொந்தியான் மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிடெண்டன் முஹமட் சோப்பி தாயிப் தெரிவித்தார்.

அச்சம் அல்லது வாகனம் ஓட்டும் உரிமம் இல்லாததால் அவர் புகார் செய்யாமல் இருக்கலாம். இருப்பினும், விசாரணைக்காக அந்நபர் அழைக்கப்பட்டுள்ளதாக சோப்பி சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!