![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/MixCollage-05-Jun-2024-08-10-PM-9161.jpg)
கோலாலம்பூர், ஜூன் 6 – போர்ட் கிள்ளானில் சுமார் 3.5 பில்லியின் ரிங்கிட் வரை சுங்க வரியை ஏமாற்றிய கடத்தல் கும்பல் முறியடிக்கப்பட்டதோடு அக்கும்பலைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர். MAA சியின் வேவுப் பிரிவு, சுங்கத் துறை, உள்நாட்டு வருமான வரிய வாரியம் ஆகியவை கூட்டாக மேற்கொண்ட நடவடிக்கையின் மூலம் அந்த கடத்தல் கும்பல் முறியடிக்கப்பட்டுள்ளது. அண்மையில் சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் சுற்று வட்டாரத்தில் பரிசோதனை செய்யப்படாமல் 19 கொள்கலன்கள் தடுக்கப்பட்டதன் மூலம் அந்த கடத்தல் கும்பலின் நடவடிக்கை அம்பலத்திற்கு வந்துள்ளது.
10க்கும் மேற்பட்ட சரக்கு நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி போலியான வரி பிரகடத்தின் மூலம் இறக்குமதி செய்யப்பட்ட பொருட்களை அக்கும்பல் கடத்தியுள்ளதாக தொடக்கக் கட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. ஏற்றுமதி – இறக்குமதி துறை குறித்து ஒன்றுமே தெரியாதவர்களின் பெயர்களை பயன்படுத்தி அவர்களது பெயர்களில் சரக்கு நிறுவனத்தை பதிவு செய்து இறக்குமதி பொருட்களை கடத்தும் நடவடிக்கையில் அக்கும்பல் செயல்பட்டு வந்துள்ளது கடந்த 3 மாத காலமாக மேற்கொள்ளப்பட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது. இந்த கும்பலுக்கு வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவர் முதுகெலும்பாக இருந்து வந்துள்ளார். இறக்குமதி செய்யப்படும் மருத்துவப் பொருட்களான சக்கர நாற்காலி போன்றவற்றிற்கு வரி விதிக்கப்படாது என்பதால் அந்த சலுகையை பயன்படுத்தி சுங்க வரியின்றி கடத்தல் பொருட்களை போர்ட் கிள்ளான் துறைமுகம் வழியாக அக்கும்பல் வெளியேற்றியிருக்கிறது. இக்கும்பலைச் சேர்ந்த இருவரை தடுத்து வைப்பதற்கு புத்ரா ஜெயாவிலுள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் அனுமதி வழங்கியிருப்பதை MACC யின் தலைமை ஆணையர் அசாம் பாக்கி ( Azam Baki ) இன்று உறுதிப்படுத்தினார்.