
போலந்து, ஜூன் 16 – போலந்தில், 57 வயதான பெண் மருத்துவரின் பழைய வீட்டுத் தோட்டத்தில், 34 கருவிலிருக்கும் சிசுக்கள் (fetuses) புதைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பந்தப்பட்ட மருத்துவர், அந்தக் கருக்களை மருத்துவ ஆய்வுகளுக்காக பயன்படுத்தியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு 12 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம்.
வீட்டுத் தோட்டத்தில் மருத்துவக் கழிவுகள் இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் சோதனை நடத்தியபோது, 34 கருக்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
விசாரணையின்போது, கருக்களை தனது வீட்டிற்கு கொண்டு வந்து புதைத்ததை மருத்துவர் ஒப்புக்கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். எனினும், அவர் தமக்கு எதிரான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.
கருக்கள் எங்கிருந்து கொண்டுவரப்பட்டன, அவற்றின் அடையாளம் என்ன, மேலும் இந்தச் சம்பவத்தில் வேறு யாரேனும் தொடர்புடையவர்களா என்பது குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



