![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/06/2392400.jpeg)
கோலாலம்பூர், ஜூன் 4 – மால்வேர் ( Malware ) பதிக்கப்பட்ட செயலி கோப்புகள் மூலம் அழைப்பு விடுக்கப்படும் திருமண அழைப்பிதழ்களை பயன்படுத்தி, தரவுகளை களவாடி , பாதிக்கப்பட்டவர்களின் நிதித் தகவல்களை ஊடுருவும் குற்றவாளிகளை போலீசார் கண்டுபிடித்துள்ளனர். இந்த உத்திகளை பயன்படுத்தி குற்றவாளிகள் மற்றவர்களின் தரவுகளை களவாடுவது 2023 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் இருந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணை மூலம் தாங்கள் கண்டறிந்துள்ளதாக புக்கிட் அமான் வர்த்தக குற்றப்புலனாய்வுத்துறையின் இயக்குனர் டத்தோஸ்ரீ ரம்லி முகமட் யூசோப் (Ramly Mohamed Yoosuf ) தெரிவித்தார்.
இந்த அணுகுமுறையின் மூலம் குற்றவாளிகள் மற்றவர்களின் தரவுகளை ஊடுருவதற்கு விவேக தொலைபேசிகளை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர். இதுபோன்ற திருமண அழைப்பிதழ்கள் பொதுவாக பாதிக்கப்பட்டவர்களுக்கு
அறிமுகமானவர்கள்போல் காட்டிக் கொள்ளும் குற்றவாளிகளால் அனுப்பப்படுகிறது.
திருமண அழைப்பு கிடைத்தவர்கள் அதில் இருக்கும் விவரங்களை அறிந்துகொள்ள செயலியை பதிவேற்றம் செய்தவுடன் அவர்களுக்கு தெரியாமலேயே பாதிக்கப்பட்டவரின் தொலைபேசி விவரங்களை மோசடி கும்பல் விவரமாக தெரிந்துகொள்ள முடியும். இதனால் பாதிக்கப்பட்டவரின் தரவுகளை ஊடுருவி அவர்களுக்கு நிதி இழப்பையும் ஏற்படுத்த முடியும் என ரம்லி வெளியிட்ட அறிக்கையொன்றில் தெரிவித்தார். பொதுமக்கள் எப்போதும் எச்சரிக்கையாகவும் விழிப்பாகவும் இருக்க வேண்டும். மேலும் செய்திகள், மின்னஞ்சல்கள் அல்லது பிற சேனல்கள் மூலம் பெறப்பட்ட விண்ணப்பக் கோப்புகளை அல்லது செயலிகளை பதிவிறக்குவதைத் தவிர்க்கும்படி ரம்லி கேட்டுக்கொண்டார்.