![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2023/12/MixCollage-05-Dec-2023-08-57-AM-7570.jpg)
பெட்டாலிங் ஜெயா, டிச 5 – மடானி அரசாங்கம் ஓராண்டு நிறைவை எட்டடியதை முன்னிட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து போக்குவரத்து சம்மன்களுக்கும் 50 விழுக்காடு அபராதம் கழிவை போலிஸ் அறிவித்துள்ளது.
டிசம்பர் 8 முதல் டிசம்பர் 10 வரை, மூன்று நாட்களுக்கு புக்கிட் ஜாலில் தேசிய அரங்கத்தின் வளாகத்தில் அமைக்கப்படவுள்ள முகப்பில் பொதுமக்கள் இந்த கட்டணக் கழிவுவோடு அபராதத்தை செலுத்தலாம் என புக்கிட் அமான் போக்குவரத்து புலனாய்வு மற்றும் அமலாக்கத் துறையின் இயக்குனர் டத்தோ முகமட் அஸ்மான் அகமட் சப்ரி தெரிவித்துள்ளார்.
டிசம்பர் 8ஆம் திகதி முகப்பிடம் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை திறக்கப்படவுள்ள நிலையில், டிசம்பர் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் மாலை 6 மணி வரை முகப்பிடம் திறக்கப்பட்டிருக்கும்.
அதே சமயத்தில், 2023ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட விபத்து தொடர்பான சம்மன், கைது வாரண்ட் கொண்ட நீதிமன்ற வழக்குகள் அல்லது இன்னமும் விசாரணையில் உள்ள குற்றங்களுக்கும் அபராதம் விதிக்கப்பட முடியாத குற்றங்களுக்குமான சம்மன்கள் இந்த கட்டணக் கழிவுச் சலுகையில் அடங்கவில்லை என அவர் கூறினார்.
நெரிசலைத் தவிர்க்கவும், பணம் செலுத்தும் செயல்முறையை எளிதாக்கவும் கட்டணம் செலுத்தும் முகப்பிடத்திற்குச் செல்லும் முன் மைபாயார் பி.டி.ஆர்.எம் ‘MyBayar PDRM’ இணையத்தள மற்றும் செயலி மூலம் தங்கள் அபராதங்களை முன்கூட்டியே சரிபார்த்துக் கொள்ளுமாறு அஸ்மான் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.