![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/05/MixCollage-21-May-2024-07-05-PM-8479.jpg)
மலாக்கா, மே 21 – மலாக்கா சென்ட்ரல் பேருந்து நிலையத்தில், தனது மடிக் கணினியையும், கையடக்க கணினியையும் தொலைத்த மாணவர் ஒருவர், அதனை தம்மிடமே திரும்ப தந்துவிடுமாறு மன்றாடிக் கேட்டுக் கொண்டுள்ளார்.
மலாக்காவிலுள்ள, பொது பல்கலைக்கழகம் ஒன்றின் மாணவரான நோ எனும் அம்மாணவர், கடந்த வெள்ளிக்கிழமை, காஜாங்கிலுள்ள தனது சகோதரியின் வீட்டிற்கு பயணமாக மலக்கா சென்ட்ரல் பேருந்து முனையத்திற்கு சென்றுள்ளார்.
பேருந்தில் ஏறுவதற்கு முன், கழிவறைக்கு சென்ற அவர்,அங்கிருந்த “சிங்கி” மீது தனது பையை வைத்துள்ளார்.
மூன்று நிமிடங்களில், கழிவறையை பயன்படுத்திவிட்டு திரும்ப வந்து பார்த்த போது, அவரது பை மாயமாகி இருந்தது.
பேருந்து முனையம் முழுவதும் தேடியதோடு, பணியில் இருந்த பாதுகாவலரிடம் விசாரித்த போதும் தகவல் எதுவும் தெரியவில்லை.
அதனால், காஜாங்கிற்கு பயணமான அவர், மறுநாள் அச்சம்பவம் தொடர்பில், சாலாக் செலாத்தான் பாரு போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.
ஐந்தாம் ஆண்டு மின்சார தொழில்நுட்ப மாணவரான நோ, பாடங்களை மேற்பார்வை செய்யவும், சிறப்பு பணிகளை முடிக்கவும் தமக்கு அந்த மடிக் கணினியும், கையடக்க கணினியும் மிகவும் அவசியம் என கூறியுள்ளார்.
அதனால், சாகாட் உதவித் தொகையில் வாங்கிய அந்த கருவிகளை யாராவது எடுத்திருந்தால், தம்மிடமே அவற்றை ஒப்படைத்து விடுமாறு அவர் மன்றாடிக் கேட்டுக் கொண்டுள்ளார்.