![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/MixCollage-21-Mar-2024-08-24-PM-8209.jpg)
தாய்மொழிப் பள்ளி மாணவர்கள்தான் மலாய் மொழி தேர்ச்சியில் சரிவைக் காண்பதாக சொல்வது ஏற்புடையதாக இல்லை என செனட்டர் நெல்சன் ரெங்கநாதன் தெரிவித்துள்ளார். தமது அனுபவத்தில் தாய்மொழிப் பள்ளியியிலிருந்து வந்த பல மாணவர்கள் தேசியப் பள்ளி மாணவர்களை விட SPM மலாய் மொழியில் சிறந்த அடைவு நிலையை பதிவு செய்திருப்பதைச் சுட்டிக்காட்டினார்.
ஆகையால் மலாய் மொழி தேர்ச்சி சரிவுக்கு ஆசிரியர்கள் காரணமா தாய்மொழிப் பள்ளிகள் காரணமா என்பதை கல்வியமைச்சர் நன்கு ஆராய வேண்டும் என நெல்சன் மேலைவையில் கேட்டுக் கொண்டார்.
சில மாணவர்கள் மலாய் மொழி எழுதுவதில் சிறந்து விளங்குகிறார்கள் ஆனால் பேசுவதில் சிரமப்படுகின்றனர். வேறு சிலர் பேசுவதிக் சிறந்து விளங்குகிறார்கள் ஆனால் எழுதுவதில் சிரமப்படுகின்றனர். இது போன்ற பிரச்சனைகளுக்கு என்ன காரணம் என்னவென்பதை கல்வியமைச்சு ஆழமாக ஆராய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
தேவையேற்பட்டால் HRDCorp-பின் கீழ் மாணவர்களுக்கு இலவச கூடுதல் மலாய் வகுப்புகளையோ பயிற்சிகளையோ நடத்தலாம் எனவும் அவர் பரிந்துரைத்தார்.
அதேசமயத்தில் இந்நாட்டில் தாய்மொழிப் பள்ளிகள் நிலைத்திருக்கும் என கூறியுள்ள கல்வியமைச்சர் Fadhlina Sidek-கிற்கு நன்றி தெரிவித்துக் கொண்ட அவர் 3M எனப்படும் வாசித்தல், எழுதுதல், கணக்கிடுதல் ஆகிய திறன்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கல்விமுறையை அமுல்படுத்தப்படுவதையும் வரவேற்பதாக மஇகா கல்விக்குழு தலைவருமான நெல்சன் தெரிவித்தார்.