
பொந்தியான், ஏப்-10-மலேசியாவின் மிகச்சிறிய பள்ளிகளில் ஒன்றாக இருந்த போதிலும், பொந்தியான் ஜாலான் பாரிட் இப்ராஹிம் தமிழ்ப்பள்ளி நாட்டின் முதல் ‘மைக்ரோசாஃப்ட் ஷோகேஸ்’ (Microsoft Showcase School) தமிழ்ப்பள்ளி என்ற உலகளாவிய அங்கீகாரத்தைப் பெற்று வரலாற்றுச் சாதனைப் படைத்துள்ளது.
இப்பள்ளியின் ‘செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான வகுப்பறை’ தொடக்க விழாவை மலேசிய கல்வி அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ டாக்டர் ஹாஜி அமினுடின் ஹாசிம் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
பள்ளியின் தலைமையாசிரியர் திருமதி கலையரசி அரிகரன் அவர்கள் கூறுகையில், வெறும் 33 மாணவர்களையும் 8 ஆசிரியர்களையும் கொண்ட இப்பள்ளி, “ஒரு மாணவருக்கு ஒரு சாதனம்” (1 Murid 1 Peranti) எனும் இலக்கை எட்டியுள்ளது எனப் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
2024-ஆம் ஆண்டு ஆசிரியர் கார்த்திக் அவர்களின் முயற்சியால் தொடங்கப்பட்ட இந்த மின்னியல் கற்றல் தளம், தற்போது கல்வி அமைச்சின் மடிக்கணினிகள், ஸ்மார்ட் போர்டு மற்றும் மாணவர்களுக்கான கையடக் கணினிகள் (Tablets) என நவீன வசதிகளுடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இந்த மாற்றத்தின் மூலம் மாணவர்கள் பாடங்களில் சிறந்து விளங்குவதோடு, அனைத்துலக நிலையில் தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.
பள்ளியில் செயற்கை நுண்ணறிவு (AI) கலாச்சாரத்தை மேலும் ஊக்கப்படுத்த கல்வி அமைச்சு 10,000 ரிங்கிட் நிதியுதவியை வழங்கியுள்ளது.



