கோலாலம்பூர், ஏப் 29 – நாட்டின் கல்வித் தரம் குறித்து கவலையளிக்கும் நிலையை தெரிவித்துள்ள உலக வங்கியின் அண்மைய அறிக்கையை அடுத்து, கல்வித்துறையில் உடனடி சீர்திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் Rafidah Aziz கோரிக்கை விடுத்துள்ளார்.
“மூங்கில் தளிர்களை வளைத்தல்: அடித்தளத் திறன்களை வலுப்படுத்துதல்” என்ற தலைப்பிலான உலக வங்கி அறிக்கையில் , மலேசிய மாணவர்கள் சராசரியாக 12.5 ஆண்டுகள் பள்ளியில் செலவழிக்கிறார்கள், ஆனால் 8.9 ஆண்டுகளுக்கு சமமான படிப்பைக் கற்றுக்கொள்கிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
5 ஆம் வகுப்பு முடிவதற்குள் 42 விழுக்காடு மலேசிய மாணவர்கள் வாசிப்புத் திறனை அடைவதில்லை. மலேசியா போன்று தனிநபர் வருமானம் கொண்ட நாடுகளில் 34 விழுக்காடு அளவில் மட்டுமே உள்ளது.
இந்த நிலையால் 15 வயது மலேசிய மாணவர் ஒருவர் வாசித்தல், கணிதம், அறிவியல் ஆகியவற்றில் சிங்கப்பூர், சீனா, ஜப்பான், வியட்நாம் போன்ற நாடுகளைவிட மிகவும் பின் தங்கியுள்ளார் என் அந்த அறிக்கை சுட்டிக்காட்டிள்ளது.
இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்கத் தவறினால், போட்டித்திறன் மற்றும் சமூகப் பொருளாதார மேம்பாடு போன்ற முக்கியமான அம்சங்களில் மலேசியா மிகவும் பின்தங்கிவிடும் என்று Rafidah எச்சரித்துள்ளார்.
இன்றைய குழந்தைகள் எதிர்காலத்தின் தொழிலாளர் பலம். எனவே, பொருளாதார மற்றும் சமூகப் பொருளாதாரச் சூழலுக்குத் தேவையான கல்வி, பயிற்சி மற்றும் திறன்களை அவர்கள் பெற்றிருக்க வேண்டும்.
அதனால் நாட்டின் கல்வி கொள்கைகள், உள்கட்டமைப்பு, பாட உள்ளடக்கம், ஆசிரியர் பயிற்சி மற்றும் அடைவுநிலை போன்ற பல்வேறு நிலைகளில் உடனடி சீர்திருத்தம் தேவை என்று அவர் வலியுறுத்தினார்.