![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/03/WhatsApp-Image-2024-03-25-at-1.17.00-PM.jpeg)
மாஸ்கோ, மார்ச் 25 – ரஷ்யா, மாஸ்கோவிலுள்ள, குரோகஸ் இசை நிகழ்ச்சி அரங்கில், குறைந்தது 137 பேரின் உயிரை பலிகொண்ட தீவிரவாத தாக்குதலை மேற்கொண்ட நால்வருக்கு எதிராக குற்றம்சாட்டப்பட்டுள்ள வேளை ; அவர்களை விசாரணைக்காக தடுத்து வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அந்நால்வருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படலாம்.
மே 22-ஆம் தேதி வரையில், அவர்களை தடுத்து வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும், விசாரணைக்கு ஏற்ப அந்த கால அவகாசம் நீட்டிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
அவர்களில், தஜிகிஸ்தானை சேர்ந்த இருவர் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளதாக, அந்நாட்டு நீதிமன்றம் ஓர் அறிக்கையின் வாயிலாக கூறியுள்ளது.
இசை நிகழ்ச்சியின் போது, ஆயுதம் ஏந்தி தாக்குதலில் ஈடுபட்ட அனைவரும் வெளிநாட்டவர்கள் என இதற்கு முன், ரஷ்ய அதிகாரத்துவ தரப்பினர் கூறியிருந்தனர்.
அந்த தாக்குதலை மேற்கொண்ட நால்வர் உட்பட உடந்தையாக செயல்பட்ட 11 பேர் கைதுச் செய்யப்பட்டுள்ளதையும் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அவர்கள் நால்வரும் உடலில் கட்டுகளுடன் நீதிமன்றத்திற்கு கொண்டு வரப்படும் காணொளியும் வெளியிடப்பட்டுள்ளன.
ஈராயித்தாம் ஆண்டுக்கு பின்னர், ரஷ்யாவில் மிகப் பெரிய உயிர் பலியை ஏற்படுத்திய தாக்குதலாக அது கருதப்படுகிறது.
அந்த கொடூர தாக்குதலுக்கு டாயிஸ் தீவிரவாத கும்பல் பொறுப்பேற்றுள்ள போதிலும், அதில் கெய்வின் (Kyiv) தலையீடு இருக்கலாம் எனும் சாத்தியத்தை, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மறுக்கவில்லை.
எனினும், கெய்வின் தலையீடு இருக்கலாம் என கூறப்படுவதை, உக்ரேனிய அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியும், அமெரிக்காவும் நிராகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.