
அலோர் ஸ்டார், ஏப்ரல்-27-வட மலேசியப் பல்கலைக்கழக விடுதியில் மாணவி எஸ். வினோசினி உயிரிழந்த விவகாரத்தில், அவரது தந்தை தொடர்ந்த 3 மில்லியன் ரிங்கிட் நஷ்ட ஈடு வழக்கை அலோர் ஸ்டார் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
வினோசினியின் மரணத்திற்கு மின்சார அதிர்ச்சிதான் காரணம் என்பதை வாதி தரப்பான அவரது தந்தை ஆர். சிவகுமார் நிரூபிக்கத் தவறிவிட்டதாக, நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டார்.
எரிசக்தி ஆணையத்தின் அறிக்கையைச் சுட்டிக்காட்டிய நீதிமன்றம், விடுதி அறையில் மின் கசிவு ஏதும் ஏற்படவில்லை என்றும், மின் பாதுகாப்பு சாதனங்கள் முறையாகச் செயல்பட்டதாகவும் தெரிவித்தது.
மேலும், வினோசினிக்கு Fibrosis Miokardium எனும் இதய நோய் இருந்ததும், மருத்துவ சாட்சியங்களின் ஆரம்பக்கட்ட கருத்துகளில் போதிய ஆதாரங்கள் இல்லை என்பதும் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.
எனவே, பல்கலைக்கழகத்திற்கு 5,000 ரிங்கிட் நீதிமன்றச் செலவுத் தொகையை வழங்க புகார்தாரர் உத்தரவிடப்பட்டார்.
எனினும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக வினோசினியின் தந்தை தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார்.
2022-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி, கணக்கியல் துறை இரண்டாம் ஆண்டு மாணவியான வினோசினி தனது விடுதி அறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.



