![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/05/MixCollage-28-May-2024-07-43-PM-1535.jpg)
கோலாலம்பூர், மே-28 – இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் 2 மசாலைத் தூள்களின் விற்பனையை உடனடியாக நிறுத்துமாறு இணையத்தில் விற்போர் உட்பட அனைத்து வியாபாரிகளும் உத்தரவிடப்பட்டுள்ளனர்.
Everest மீன் கறி மசாலா, MDH கறி மசாலா ஆகிய அவ்விரு மசாலைத் தூள்களிலும், பூச்சிக்கொல்லியாகப் பயன்படுத்தப்படும் ethylene oxide எனும் இரசாயணம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதே அதற்குக் காரணம்.
பாக்டீரியா, வைரஸ் மற்றும் பூஞ்சைகளில் இருந்து உருவாகும் நுண்ணுயிர் கிருமிகளைக் கட்டுப்படுத்த, ethylene oxide மசாலைத் தூளில் கலக்கப்படுகிறது.
எனவே, அவ்விரு மசாலைத் தூள் குறித்த விளம்பரங்களையும், இணையத்தில் இருந்து உடனடியாக அகற்றுமாறு சுகாதார அமைச்சு கூறியது.
ethylene oxide இரசாயணம் கலந்திருப்பதால் அவ்விரு மசாலைத் தூளும் தடை செய்யப்பட வேண்டும் என, பினாங்குப் பயனீட்டாளர் சங்கம் CAP கடந்த வாரம் சுகாதார அமைச்சைக் கேட்டுக் கொண்டிருந்த நிலையில், KKM இன்று இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இவ்வாண்டு ஏப்ரல் வரைக்குமான நிலவரப்படி, Everest மீன் கறி மசாலா ஒரு முறை மட்டுமே இங்கு இறக்குமதியாகியுள்ளது.
அதே சமயம், MDH கறி மசாலா இறக்குமதியானதாக குறிப்பேதும் இல்லை என அமைச்சு தெளிவுப்படுத்தியது.
நாட்டுக்குள் வரும் எந்தவோர் உணவுப் பொருளும், உணவுத் தர மற்றும் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது என்ற உத்தரவாதத்தையும் அமைச்சு வழங்கியது.
ஹாங் காங், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளும் அந்த மீன் கறி மசாலாவை சந்தையில் இருந்து மீட்டுக் கொள்ள உத்தரவுப் பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது.